Sunday, July 19, 2020

Tuesday, June 2, 2020

வருமான வரித்துறையின் புதிய ஆயுதம்!

இந்தியாவின், 2020 – 21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் காண்பிக்கப்பட்ட செலவு ரூ.30.42 லட்சம் கோடி. அரசு இப்படி செலவு செய்வதற்கு உள்ள முக்கிய நிதி ஆதாரம், நேரடி மற்றும் மறைமுக வரிகள் மட்டுமே. பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை கொஞ்சம் விற்பதன் வாயிலாக, அரசு, வருவாய் பார்க்க முடியும். வரியினங்கள் வசூலானால் தான், அரசு தாராளமாக செலவு செய்ய இயலும்.
7 சதவீதம் கூட இல்லை
மத்திய அரசுக்கு, 2018–19ம் ஆண்டில் வசூலான மொத்த வரித்தொகை, ரூ.20.76 லட்சம் கோடி. அதில் வருமான வரி போன்ற நேரடி வரிகள் வாயிலாக வசூலானது, ரூ.11.37 லட்சம் கோடி. இந்தியாவில், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை, 7 சதவீதம் கூட இல்லை. 2018– 19ம் ஆண்டில், 8.45 கோடி பேர் வரிசெலுத்தினர். அதற்கு முந்தைய ஆண்டில் வரி செலுத்தியோர், 7.42 கோடி பேர்.அரசுக்கு, வரியினங்கள் திட்டமிட்டபடி வசூலானால், மக்கள் நலத்திட்டங்கள் உயிர்பெறும். நாடு வளம் பெறும். ஆனால், ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் நிர்ணயிக்கப்படும் இலக்கு அளவுக்கு வரியினங்கள் வசூலாவதில்லை. பொருளாதார மந்த நிலை, இயற்கை பேரிடர், உலக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால், வரியினங்கள் வசூலாவதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.இம்முறை, இந்தியாவுக்கு, கொரோனாவால் நேரடி, மறைமுக வரியினங்களின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு நிவாரணமாக, ரூ.20 லட்சம் கோடி மதிப்புக்கு சலுகைகள், பேரிடர் உதவி தொகைகளை, மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. தவிர, மக்கள் நலத் திட்டங்களுக்கு தொடர்ந்து செலவிட, அரசுக்கு பணம் வேண்டுமே.

டியர் குடிமகனே!
மத்திய நேரடி வரி வாரியம், ஆண்டுதோறும், வரிதாரர்கள் சமர்ப்பிக்கும் வருமான வரி தாக்கலுடன் வழங்கப்படும், படிவம் 26 ஏ.எஸ்., (வருடாந்திர ஒருங்கிணைந்த வரி வரவு அறிக்கை)யை புதுப்பித்து அதில், புதிய விதி 114–ஐ என்பதை இணைத்திருக்கிறார்கள். இது, ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.புதிய விதியால், வருமான வரித்துறைக்கு எப்படி வருவாய் கொட்டும் என்று யோசிக்கிறீர்களா? மோடி அரசின், ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற வலுவான இணைய தொழில்நுட்ப அடித்தளமே, தற்போது அரசு கஜானாவுக்கு காசு கொண்டுவரப்போகிறது. வருமான வரியை குறைத்து காட்டுபவர்கள் அல்லது வரி ஏய்ப்பு செய்பவர்களை அடையாளம் கண்டு, ‘டியர் குடிமகனே, நீங்கள் செலுத்த வேண்டிய வரியை கட்டிவிடுங்கள்’ என, வரித்துறை அன்புக்கட்டளையிட போகிறது.நான் ஆரம்ப நாட்களில் பல முறை யோசித்திருக்கிறேன். ஒருவரின் அல்லது ஒரு நிறுவனத்தின் வருமானத்தின் அடிப்படையில் தான், வரி செலுத்தப்போகிறார்கள். அப்புறம் எதற்கு ஒவ்வொரு நிதியாண்டிலும், வருமான வரித்துறைக்கு இலக்கு நிர்ணயிக்கிறார்கள் என்று. பின்பு தான் ஒரு நிதர்சனம் புலப்பட்டது.முறையாக வருமான வரி கட்டாதவர்கள், வரியே கட்டாமல் ஏய்ப்பவர்கள், கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் போன்றோரை அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுத்து, வரி வசூல் செய்வதற்கே, வருமான வரித்துறைக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும் இலக்கு நிர்ணயிக்கப்படுவது புரிந்தது.

வருவாய் தரும் டிஜிட்டல்




நேரடி வரி வருவாயை அதிகரிக்க செய்யும் ஒரு மவுனப் புரட்சி தான், படிவம் 26 ஏ.எஸ்., உடன் இணைந்த விதி 114–ஐ. அதன்படி, டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஈடுபடும், நாட்டின் மொத்த மக்களின் நடவடிக்கைகளும் ஆய்வுக்கு உட்படுகிறது.படிவம் 26 ஏ.எஸ்., என்பது, ஒரு வங்கியில், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ‘பாஸ் புக்’ போன்றது. ஐ.டி.ஆர்., (இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன்) தாக்கல் செய்யும்போது, படிவம் 26 ஏ.எஸ்., ஐ சரிபார்க்க வேண்டும். அதில், வரிதாரரின் அட்வான்ஸ் டாக்ஸ், டி.டி.எஸ்., டி.சி.எஸ்., போன்றவற்றின் வாயிலாக எவ்வளவு வரி செலுத்தப்பட்டிருக்கிறது என்பதுதான், இதுநாள் வரை சொல்லப்பட்டிருந்தது.புதிய முறைப்படி, ஒவ்வொரு மூன்று மாதத்துக்கு ஒரு முறையும், ஒரு வரிதாரரின், ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அத்தனையும் பட்டியலிடப்பட்டு, வருமான வரித்துறையின் இணையதளத்தில் காண்பிக்கப்படும். வரிதாரரும் அதை இணையதளத்தில் சென்று பார்வையிட முடியும்.

பக்கா டெக்னாலஜி
தற்போது, பான் கார்டு, ஆதார் எண், மொபைல் எண், வங்கி கணக்கு எண் போன்றவை, ஒன்றொடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், வரிதாரருக்கு, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வருமானம் வந்தாலோ அல்லது அவர் செலவு செய்திருந்தாலோ, அது டிஜிட்டல் பரிவர்த்தனையாக இருந்தால், மேற்கண்ட ஆவணங்களின் அடிப்படையில் நடந்திருந்தால், அவை வருமான வரித்துறை இணையதளத்தில், வரிதாரரின் பக்கத்துக்கு சென்றுவிடும்.மூன்று மாதத்திற்கு ஒரு முறை அது, ‘அப்டேட்’ ஆகும். ஒரு வரிதாரரின், அன்றாட பண பரிவர்த்தனைகளின் மொத்த ஜாதகமும் இணையத்தில் பார்த்துக்கொள்ளும் வசதி வந்துவிடும். அதற்கேற்ப, வருமான வரித்துறையின் இணையதள தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. பல நாடுகளில் உள்ள, ‘ஆட்டோ பில்லிங் பார்ம்’ போல, அளிக்கப்படும் ஆன்லைன் ‘கணக்கு, வழக்கு’களை ‘ஆம்’, ‘இல்லை’ என்று உறுதி செய்து, ஒரு ‘என்டர் பட்டனை’ தட்டினால்போதும், தங்கள் வரியை, ஒரு வரிதாரர் தாங்களே செலுத்திவிடும் காலம் வெகுதூரமில்லை.

புதிரா? புன்னகையா?
புதிய விதியின்படி, வரிதாரரின் ஆண்டு நிதி தகவல்களில், எந்தெந்த நடவடிக்கைகள் இணையதளத்தில் பட்டியலிடப்படும் என்று பார்ப்போமா?படிவம் 26 ஏ.எஸ்.,ல், முன்பு டி.டி.எஸ்., டி.சி.எஸ்., வரிப்பிடித்தங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது என அறிந்தோம். தற்போது, 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட பொருட்கள் வாங்குவது, விற்பது, சொத்துகள் பரிவர்த்தனை, சேவைகள், வேலை ஒப்பந்தங்கள், முதலீடுகள், செலவுகள், கடன்கள், டெபாசிட், வருமான வரி ‘ரிபண்ட்’, மறு மதிப்பீடு போன்ற, வருமான வரி கோரிக்கைகள், நிலுவையில் உள்ள நடவடிக்கைகள் மற்றும் முடிக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல்களும், 26 ஏ.எஸ்-.,படிவத்தில் பகிரப் படும்.

அதேபோல, கஸ்டம்ஸ், ஜி.எஸ்.டி, பினாமி சட்டங்களின் கீழ் நடக்கும் நிறுவனத்தின் விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி போன்றவற்றில், ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அதுபற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கும்.மேலும், வரி செலுத்துவோருக்கு நாடு கடந்து, வெளிநாட்டில் கிடைக்கும் வருமானம் அல்லது சொத்துக்கள் குறித்து, வரித்துறை பெற்ற தகவல்களும் இதில் குறிப்பிடப்படும். இதனால், நாட்டின் எந்த பகுதியில் இருக்கும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட வரிதாரரின் முழு நடவடிக்கைகளும் இணையதளம் வாயிலாக தெரியவரும்.

அதேபோல, இனி, கடன் வழங்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அரசு அமைப்புகளும், இவற்றை பயன்படுத்த முடியும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை, வரிதாரரின் நிதி நடவடிக்கைகள் இதில் அப்டேட் ஆகும். ஆண்டு இறுதியில், அவற்றை உறுதிப்படுத்துவது மட்டும்தான் வரி செலுத்துபவரது வேலையாக இருக்கும். நிதி நடவடிக்கைகளை மறைக்க நினைக்கும் வரிதாரர்களுக்கு, இது ஒரு புதிரே. சரியாக, முறையாக வரிக்கட்ட விரும்புபவர்களுக்கு, இது புன்னகை.

https://business.dinamalar.com/news_details.asp?News_id=46841&cat=1

Friday, May 29, 2020

ip man fight scean 1

ரூ.140 கோடி கோவில் நிலம்,'ஸ்வாகா' :

சென்னை,: சென்னை, மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 140 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, வணிக வளாகம் கட்டப்பட்டு வருவது, ஆன்மிக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பேரூராட்சியில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது.
தொல்லியல் மற்றும் ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், உலக பண்பாட்டு நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இக்கோவிலுக்கு சொந்தமாக, மாடம்பாக்கம் உட்பட பல இடங்களில், 46 ஏக்கர், 23 சென்ட், புஞ்சை நிலங்களும்; 26 ஏக்கர், 69 சென்ட் நஞ்சை நிலங்களும் உள்ளன.இதில், ராஜகீழ்ப்பாக்கம் - -மாடம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள, 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த, 7 ஏக்கர், 57 சென்ட் நிலம், தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு, வணிக வளாகம் கட்டப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.இது குறித்து, ஆன்மிக பெரியவர்கள் கூறியதாவது:கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான நிலங்களின் பெரும் பகுதி, குடியிருப்புகளாகவும், விவசாய நிலங்களாகவும் உள்ளன.தற்போது, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தில், அனுமதியின்றி வணிக வளாகம் மற்றும் 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.இதில், வணிக வளாகம், தரை மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டு வருகிறது. இதை, மாடம்பாக்கம், 'சாந்தி ஹார்டுவேர்ஸ்' எனும் கடையின் உரிமையாளர், என்.சி.செல்வகுமார் என்பவர் கட்டி வருகிறார்.இவர், மாடம்பாக்கம் வியாபாரிகள் சங்க தலைவராக உள்ளார்.

அதனால், கோவிலின் செயல் அலுவலர் உட்பட அனைத்து அதிகாரிகளையும் சரிகட்டி, கட்டுமான பணிகளை செய்து வருகிறார்.இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர், ஆக்கிரமிப்பாளரிடம் பெரிய தொகையை பெற்று, இன்று வரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். மேலும், புகார் அளிக்க அழைத்தவரிடம், 'உன் வேலையை மட்டும் பார்' எனக் கூறியுள்ளார்.
கோவிலுக்குச் சொந்தமான, 95 சதவீத நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில், எஞ்சி இருந்த, 7 ஏக்கர் நிலமும் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது, வேதனை அளிக்கிறது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின், மொத்த சந்தை மதிப்பு, 140 கோடி ரூபாய்.இந்த நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை ஒழுங்குபடுத்தி, அவர்களிடம், நிலங்களுக்கான தரை வாடகை மற்றும் வரி வசூலித்தாலே, ஆண்டிற்கு, 10 கோடி ரூபாய்க்கும் மேல், கோவிலுக்கு வருமானம் கிடைக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மாடம்பாக்கம், கிராம நிர்வாக அலுவலர் ராமதாஸ் கூறியதாவது:சம்பந்தப்பட்ட நிலம், தங்களுக்கு சொந்தமானது எனவும், அதை, அளந்து கொடுக்குமாறும், தேனுபுரீஸ்வரர் கோவிலின் செயல் அலுவலர், சில மாதங்களுக்கு முன் கேட்டார்.தொடர்ந்து, நிலத்திற்கான ஆவணங்களை சரி பார்த்து, அதை, முழுவதுமாக அளந்து பார்த்தோம். அதில், நிலம் முழுவதும், கோவிலுக்குச் சொந்தமானது என, உறுதியானது.பின், நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து, தாசில்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.அவரும், போலீஸ் உதவியுடன், ஆக்கிரமிப்பு களை அகற்றி விடுங்கள் என, செயல் அலுவலரிடம் கூறினார்.புறம்போக்கு நிலமாக இருந்தால், நாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தை மீட்க முடியும்.கோவிலுக்கு சொந்தமான நிலம் என்பதால், அதன் செயல் அலுவலர் தான், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.கோவில் செயல் அலுவலர் சிவகுமார் கூறியதாவது:ஆக்கிரமிப்பு தொடர்பாக, மார்ச், 22ல், சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

நடவடிக்கை


கொரோனா காரணமாக, போலீசார் நடவடிக்கை எடுப்பதில், தாமதம் ஏற்பட்டதுடன், கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டு இருந்தன.ஊரடங்கில் தளர்வு அறிவித்ததால், கட்டுமான பணிகள் மீண்டும் துவங்கி உள்ளன. இது தொடர்பாக, செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம்.அதில், கட்டுமான பணிக்கு, விரைவில் தடை கிடைக்கும் என, எதிர்பார்த்துள்ளோம். தாம்பரம் தாசில்தாரிடம், ஆக்கிரமிப்பு குறித்து எடுத்துக் கூறி, அதை அகற்ற
அனுமதி கேட்டுள்ளோம்.ஓரிரு நாட்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

குழு அமைக்குமா ஐகோர்ட்?

மாடம்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர், ஜி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:கோவில் நிலங்கள் தனியார் வசம் இருந்தால், சூறையாடப்படும் என்பதாலேயே, ஹிந்து அறநிலையத் துறை உருவாக்கப்பட்டு, தொன்மையான கோவில்களின் பராமரிப்பு, அத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது.தற்போது, மாநிலம் முழுதும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள், இத்துறையின் கீழ் உள்ளன. இக்கோவில்களின் சொத்துக்கள், சில அரசியல்வாதிகளாலும், தனியாராலும் சூறையாடப்பட்டு, வீடுகளாகவும், வணிக வளாகங்களாகவும் மாறி உள்ளன.
இதற்கு, சம்பந்தப்பட்ட கோவில்களில் உள்ள, அறநிலையத் துறை அதிகாரிகளே காரணம். இதை, துறை அமைச்சரும், தமிழக அரசும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். உயர் நீதிமன்றம் தலையிட்டு, சிறப்புக் குழு அமைத்து, மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர் கோவிலின் சொத்து உட்பட, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, அனைத்து கோவில்களின் சொத்துக்களுக்கான ஆவணங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.அதில், ஆக்கிரமிப்புகள் இருந்தால், அந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


Thursday, May 28, 2020

10 - உருத்திர பசுபதி நாயனார்


பெயர்: உருத்திர பசுபதி நாயனார்

குலம்: அந்தணர்
பூசை நாள்: புரட்டாசி அசுவினி
அவதாரத் தலம்: தலையூர்
முக்தித் தலம்: தலையூர்

வரலாறு சுருக்கம்:

“முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கு மடியேன்”
-திருத்தொண்டத் தொகை

வேதம் நான்கும் வேதாங்கம் ஆறும் நியாயம் மீமாஞ்சை மிருதி புராணம் என்னும் உபாங்கம் நான்கும் ஆகிய பதினான்கு வித்தைகளுள்ளும் வேதமே மேலானது; வேதத்துள்ளும் உருத்திரைகாதசினி மேலானது; அதினுள்ளும் ஐந்தெழுத்து மேலானது; அதினுள்ளும் சிவ என்னும் இரண்டெழுத்தே மேலானது.

எப்பொருள்களினும் சிவன் கலந்திருப்பர் என்பது தெரிந்து கொள்ளுதற் பொருட்டென்க. தமிழ் வேதமாகிய தேவாரத்துள் நின்ற திருத்தாண்டகம் முதலியவற்றினும் "இருநிலனாய்த் தீயாகி நீருமாகி யியமான னாயெறியுங் காற்று மாகி - யருநிலைய திங்களாய் ஞாயி றாகி யாகாச மாயட்ட மூர்த்தி யாகிப் - பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும் பிறருருவுந் தம் முருவுந் தாமே யாகி - நெருநலையா யின்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிக ணின்றவாறே" என்பது முதலாக இவ்வாறு பகுப்பின்றிக் கூறுதல் காண்க.

சிவனிடத்து இடையறாத மெய்யன்போடு இந்த ஸ்ரீ ருத்திரத்தை நியமமாக ஓதுவோர் முத்தி பெறுவர். இவ்வுருத்திரத்தை, தடாகத்திலே இரவு பகல் கழுத்தளவினதாகிய ஜலத்திலே நின்றுகொண்டு, ஐம்புலன்களை அடக்கி, சிவனை மறவாத சிந்தையோடும் ஓதினமையால், முத்திபெற்றவர் இவ்வுருத்திரபசுபதி நாயனார். ஆதலால், இவ்வுருத்திரத்துக்கு உரியவர், தமது வாணாளை வீணாளாகப் போக்காது சிவனை மறவாத சிந்தையோடும், இதனை நியமமாக ஓடியவரை பற்றி அறியலாம்...

பொன்னி நதியால் வளம் சிறந்து விளங்கும் சோழ நாட்டில் தலைசிறந்து விளங்கும் ஓரூர் திருத்தலையூர். இத்திருத்தலையூரிலே அந்தணர் குலத்திலே பசுபதியார் என்னும் பெரியார் அவதரித்தார்.

இவர் சிவபெருமானது திருவடிகளில் நிறைந்த அன்பினையே பெருஞ்செல்வமெனக் கொண்டிருந்தார். இவ்வன்புச் செல்வத்தால் ஸ்ரீ உருத்திர மந்திரத்தைக் காதலித்தோதி வந்தார். இவர் தொடர்ந்து சில நாட்கள் தாமரைத் தடாகத்திலே கழுத்தளவு தண்ணீரில் இரவு பகலாக நின்று கொண்டு இருகைகளையும் தலைமேற் குவித்துச் சிவனை மறவாத சிந்தையராய் அருமறையாகியப் பயனாகிய திருவுருத்திரத்தை வழுவாது ஓதும் நியதியுடையவராய் இருந்தார்.

இவர் தம் அருந்தவப் பெருமையையும் வேதமந்திர நியதியின் மிகுதியையும் விரும்பிய சிவபெருமான் காட்சி அளித்து இந்நாயனாருக்கு தீதிலாச் சிவலோக வாழ்வினை நல்கியருளினார்.முக்தியும் அடைந்தார் உருத்திர பசுபதி நாயனார்.

9 - இளையான்குடி மாறநாயனார்

                                           இளையான்குடி மாறநாயனார்
பெயர்: மாறநாயனார்
குலம்: வேளாளர்
பூசை நாள்: ஆவணி மகம்
அவதாரத் தலம்: இளையான்குடி
முக்தித் தலம்: இளையான்குடி

வரலாறு சுருக்கம்:

“இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்"
-திருத்தொண்டத் தொகை

இளையான்கடியென்னும் ஊரிலே, வேளாளர் குலத்திலே, எத்தொழிலினும் சிறந்த வேளாண்மையால் வரும் குற்றமற்ற அளவிறந்த செல்வத்தையும், சிவனடியார்கண் மேலே முழுமையும் பதிந்த அன்பு கொண்ட சிந்தையையும் உடையவராகிய மாறனார் என்பவர் ஒருவரிருந்தார்.

அவர் தம்முடைய கிருகத்துக்கு வரும் சிவபத்தர்கள் எந்த வருணத்தாராயினும், மெய்யன்போடு அவர்களை எதிர்கொண்டு, அஞ்சலிசெய்து, இன்சொற்களைச் சொல்லி, வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்து, கரகநீர் கொண்டு அவர்கள் திருவடிகளை விளக்கி, அத்தீர்த்தத்தைச் சிரமேற்றெளித்து, உள்ளும்பருகி, அத்திருவடிகளை மெல்லிய வஸ்திரத்தினாலொற்றி, ஆசனத்திலிருத்தி, சைவாகம விதிப்படி அருச்சித்து நமஸ்கரித்து, பின்பு கைப்பு, புளிப்பு, தித்திப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையையுடையனவாய், உண்ணப்படுவது, தின்னப்படுவது, நக்கப்படுவது, பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை அவரவர் பிரீதிப்படி திருவமுதுசெய்விப்பார்.

இப்படித் தினந்தோறும் மாகேசுரபூசை பண்ணுதலாகிய சிவபுண்ணியத்தினாலே செல்வம் அபிவிருத்தியாக, அவர் குபேரனை ஒத்து வாழ்ந்திருந்தார். அப்படியிருக்குங் காலத்திலே, சிவபெருமான், அவ்விளையான்குடி மாறநாயனார் இந்தச் செய்கையைச் செல்வம் வந்தகாலத்திலன்றி வறுமை வந்த காலத்தினும் தளராது செய்யவல்லவர் என்பதையும், தாம் நல்லோர்களுக்கு வறுமையைக் கொடுத்தல் அவர்கள் நயத்தின் பொருட்டே என்பதையும், அந்நயம் இறுதியிலேயே பலிக்கும் என்பதையும், அக்கருத்தறியாது அதற்குள்ளே புண்ணியஞ் செய்த நமக்குக் கடவுள் இடர்செய்தாரே என்று தம்மை நோதல் பழுதாம் என்பதையும், பிறர்க்குத் தெரிவித்து உய்விக்கும்பொருட்டுத் திருவுளங்கொண்டு, அந்நாயனாரிடத்திலே உள்ள செல்வமெல்லாம் நாடோறும் சுருங்கி வறுமை யெய்தும்படி அருள்செய்தார்.

அப்படிச் செல்வம் சுருங்கவும், நாயனார் மாகேசுரபூசையிலே பதிந்த தம்முடைய மனம் சிறிதும் சுருங்குதலின்றி, தம்மிடத்துள்ள நிலங்கள் முதலியவற்றை விற்றும், தம்மைக் கூட விற்று இறுக்கத்தக்க அவ்வளவு கடன்களை வாங்கியும், முன்போலவே தாஞ்செய்யும் திருப்பணியை விடாது செய்து வந்தார்.

அவர், மழைக்காலத்திலே மழைபெய்யும் ஒருநாள் இரவில் நெடுநேரம் எதிர்பார்த்திருந்தும், ஒருவருடைய உதவியும் இல்லாமல், பகன்முழுதும் போசனஞ்செய்யாமையால் பசி அதிகப்பட்டு; வீட்டுக்கதவைப் பூட்டிய பின்பு; திருக்கைலாசபதியானவர் சைவவேடங்கொண்டு எழுந்தருளிவந்து, கதவைத் தட்டி அழைக்க; நாயனார் கதவைத் திறந்து, அவரை உள்ளே அழைத்துக் கொண்டுபோய், மழையினால் நனைந்த அவருடைய திருமேனியை வஸ்திரம் கொண்டு துடைத்து, இருத்தற்கு இடங் கொடுத்து, அவருக்கு அமுதூட்டல் வேண்டும் என்னும் ஆசை மிகுதியால் தம்முடைய மனைவியாரை நோக்கி

"இந்தச் சைவர் மிக பசிகொண்டு வந்திருக்கின்றார். நமக்கு முன்னமே போசனத்துக்கு ஒன்றுமில்லை. ஆயினும், இவருக்கு எப்படியும் அன்னங்கொடுக்கவேண்டுமே; இதற்கு யாது செய்வோம்" என்றார் மாறநாயனார்.

அதற்கு மனைவியார் "வீட்டிலே ஒரு பதார்த்தமும் இல்லை. அயலவர்க்கும் இனி உதவமாட்டார்கள். நெடுநேரம் ஆயிற்று. அரிசிக்கடன் கேட்கபோவதற்கு வேறிடமும் இல்லை. பாவியாகிய நான் இதற்கு யாது செய்வேன்" என்று கூறினாள்.

"இன்று பகற்காலத்திலே வயலில் விதைக்கப்பட்ட ஈரத்தால் முன்னமே முளைகொண்டிருக்கின்ற நெல்லை வாரிக் கொண்டு வந்தால், இயன்றபடி அன்னஞ் சமைக்கலாம்; இதுவேயன்றி, வேறொருவழியும் அறியேன்" என்று சொல்லி ஈசனை துக்கித்தார் மாறநாயனார்.

இளையான்குடி மாறநாயனார் மிக மனமகிழ்ந்து, மிக மழைபொழிகின்ற மகா அந்தகாரமயமாகிய அத்தராத்திரியிலே ஒரு பெரிய இறைகூடையைத் தலையிலே கவிழ்த்துக்கொண்டு, காலினாலே தடவிக் குறிவழியே தம்முடைய வயலிற்சென்று, அதிலே அதிக மழையினால் நீர்மேலே மிதக்கின்ற நென் முளைகளைக் கையினாலே கோலி வாரி, இறை கூடை நிறைய இட்டு, தலையிலே வைத்துச் சுமந்துகொண்டு சீக்கிரம் திரும்பி வந்தார்.

அவரை எதிர்ப்பார்த்துக்கொண்டு வாயிலிலே நின்ற மனைவியார் மனமகிழ்ச்சியோடு அந்த நெள்முளையை வாங்கி, சேறு போம்படி நீரினாலே கழுவியூற்றி, பின்பு தம்முடைய பிராணநாயகரை நோக்கி,

"அடுப்பிலே நெருப்பு மூட்டுதற்கு விறகு இல்லையே" என்று சொல்லி வருத்தம் கொண்டார் நாயனார் மனைவி.

அவர் கிலமாயிருக்கின்ற வீட்டின் மேற்கூரையிலுள்ள வரிச்சுக்களை அறுத்து விழுத்தினார். மனைவியார் அவைகளை முறித்து, அடுப்பிலே மாட்டி, நென்முளையை ஈரம் போய்ப் பதமாகும்படி வறுத்து, பின் அரிசியாக்கி, நீர் வார்த்துக் காய்ந்திருக்கின்ற உலையில் அதையிட்டு, சோறாக்கி, தம்முடைய நாயகரைப் பார்த்து,

"இனிக் கறிக்கு யாதுசெய்வோம்" என்றார் நாயனார் மனைவி.

உடனே நாயனார் புறக்கடைத் தோட்டத்திற்குச் சென்று, குழியினின்றும் மேற்படாத சிறுபயிர்களைக் கையினாலே தடவிப் பிடுங்கிக் கொண்டு வந்து, கறி சமைக்கும்படி கொடுக்க; மனைவியார் அவைகளை
வாங்கி ஆய்ந்து, நீரினாலே கழுவி, தமது சாமர்த்தியத்தினால் வெவ்வேறு கறியமுது செய்து முடித்து, நாயகருக்கு அமுதும் கறியும் பாகம் பண்ணப்பட்டமையைத் தெரிவித்து, "சைவரை அமுதுசெய்விப்போம்" என்று சொன்னார்.

நாயகர், நித்திரை செய்பவர்போலக் காட்டிய சிவபெருமானை "சுவாமீ! அமுதுசெய்ய எழுந்தருளும்" என்று சொல்லி அழைக்க...

ஈசன் ஒரு சோதிவடிவமாய் எழுந்து தோன்றினார். அதைக் கண்ட இளையான்குடி மாறநாயனாரும் மனைவியாரும் திகைத்து நின்றார்கள். பின்பு பரமசிவன் பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய்த் தோன்றி, இளையான்குடிமாறநாயனாரை நோக்கி...

"அன்பனே! நம்முடைய அடியார்களை அமுதுசெய்வித்த நீ உன்மனைவியோடும் நம்முடைய பதத்தை அடைந்து, பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிரு" என்று திருவாய்மலர்ந்தருளி அந்தர்த்தானமாயினார். வறுமை நீங்கி செல்வம் பெற்று பல சிவபக்தர்களுக்கு சேவை செய்து இறைபதம் அடைந்தனர் இருவரும்.

குல தெய்வம்

#குல_தெய்வம்
#முழுமையாகஓர்அலசல்

33 கோடி தேவர்களில் குலதெய்வம் யார் என்பதை எப்படி கண்டு பிடிப்பது?

எனக்கு ஒரு பழக்கம் உண்டு. எங்காவது ஒரு ஆலயத்துக்குச் சென்றால் அங்கு ஏதாவது விவரம் அறிந்த பண்டிதர் இருந்தால் அவர்களிடம் தெய்வ சம்மந்தமாக ஏதாவது கேட்டு தெரிந்து கொள்வது உண்டு. என்னிடம் யாராவது மாட்டிக் கொண்டு விட்டால் லேசில் விடுவது இல்லை. கேட்டு முடித்தப் பின் தட்சணையாக ஏதாவது தருவதை மறப்பதில்லை. இந்த முறையும் ஒருவர் வசமாக மாட்டிக் கொண்டார். ஒரு சமயம் ஒரு கிராமத்தில் இருந்த ஆலயத்துக்கு சென்ற இருந்தபோது அங்கு ஒரு வயதான பண்டிதர் போன்றவர் இருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது குல தெய்வத்தைப் பற்றிய சந்தேகத்திற்கு விளக்கம் கேட்டேன். அவர் அதற்கு ஒரு பிரசங்கமே கொடுத்து விட்டார். அதைக் கேட்டபோது மிக அற்புதமாக இருந்தது. அதன் பிறகு நாங்கள் ஆலயத்தை சுற்றி விட்டு வந்தபோது அவரை அங்கு காணவில்லை. நான் தவறு செய்துவிட்டதாகத் தோன்றியது. அவர் பெயரையோ, எங்கு இருக்கின்றார் என்பதையோ கேட்டுக் கொள்ளவில்லை. அங்கும் இங்கும் தேடியும் அவரைக் காணவில்லை. எனக்காகவே அவர் அங்கு வந்திருந்தது போல இருந்த அவர் யார்? தெரியவில்லை, ஒரு கனவு போல வந்தார், சென்றார் என ஆகிவிட்டது. ஆனால் குலதெய்வம் பற்றி அவர் கொடுத்த பிரசங்க விளக்கமே சரியானதாக இருந்தது . பண்டிதர் கொடுத்த தகவல் இது:

குல தெய்வம் யார் எனத் தெரியாதவர்கள்
என்ன செய்ய வேண்டும்?

'' முன் காலத்தில் சில கிராமப்புறங்களில் இருந்த பிராமணர்களுக்கு தமது குல தெய்வம் யார் என்று தெரியாமல் இருந்தபோது அவர்கள் நதியில் குளித்து விட்டு பூமியில் இருந்து ஒரு பிடி களி மண்ணை எடுத்து வருவார்கள். வீட்டிற்கு வந்து அதை பிள்ளையார் பிடிப்பதைப் போல பெரியதாக பிடித்து மஞ்சள் குங்குமம் இட்டு அதையே தமது குலதெய்வமாக வணங்கி பூஜிப்பார்கள். குல தெய்வம் யார், அது ஆணா, இல்லை பெண்ணா என்பது என்பது தெரியாததினால் உருவமற்ற அதை ஒரு பீடத்தில் (அந்த காலத்தில் மரப்பலகைகள் நிறையக் கிடைக்கும் என்பதினால்) சந்தனத்தினால் ஒரு கட்டம் போட்டு அதில் வீபுதி மற்றும் மஞ்சள் குங்குமத்தையும் தூவி களி மண்ணால் செய்த பிள்ளையார் பிடியைப் போன்ற அந்த குலதெய்வ களிமண் தெய்வத்தை அதன் மீது வைத்து அதையே தமது குல தெய்வமாக எண்ணி பூஜை செய்வார்கள். வீபுதியையும், மஞ்சள் மற்றும் குங்குமத்தை தூவுவது எதற்காக என்றால் குல தெய்வம் யார், அது ஆணா, இல்லை பெண்ணா என்பது தெரியாததினால் ஆண், பெண் என்ற இருவருக்கும் பொருந்தும் வகையில் ஆணான குல தெய்வமாக இருந்தால் சந்தனம் மற்றும் வீபுதியையும், பெண்ணான குல தெய்வமாக இருந்தால் சந்தனம் மற்றும் குங்குமத்தையும் இடுவதான ஐதீகம் கொண்டு அதை செய்வார்கள் . பூஜை முடிந்ததும் பூஜை அறையில் அந்த களிமண் பிடியை தமது குல தெய்வமாக கருதிக் கொண்டு ஸ்வாமி பீடத்தில் பத்திரமாக பாதுகாப்பாக உடையாமல் வைத்து விடுவார்கள். அதையே தமது குல தெய்வமாக வணங்கி வரும்போது ஒரு கட்டத்தில் நிச்சயமாக அவர்களுடைய குலதெய்வம் அவர்கள் கனவிலோ அல்லது யார் மூலமாகவோ வந்து அவர்களுக்கு தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும். இது சத்தியமான உண்மையாகவே இருந்தது''

அவர் மேலும் கூறுகையில் 'ஒரு தவறை செய்யக்கூடாது' என எச்சரித்தார்.

''பூமியில் இருந்து எடுத்த களி மண்தானே என அதை அலட்சியப்படுத்தி விடக் கூடாது. எப்போது அந்த மண் பிடியை குல தெய்வத்தின் உருவம் என்று கருதி பூஜிப்போமோ அப்போதே அதில் நம்மை அறியாமல் நம்முடைய குல தெய்வங்கள் வந்து குடியேறும். ஆகவே அதை தமது குல தெய்வம் அடையாளம் தெரியும் வரை பத்திரமாக, உடையாமல் பாதுகாத்து வர வேண்டும். தேவை என்றால் தெய்வங்களை வைத்து உள்ள இடத்திலோ, பூஜை அறையிலோ ஒரு சிறிய பிளாஸ்டிக் பெட்டியிலாவது வைத்து அதை பத்திரமாக வைத்து பாதுகாக்க வேண்டும். மேலும் அதற்கு தினமும் ஒரு பூவாவது, அது முடியவில்லை என்றால் அதன் பீடத்தில் சிறிது குங்குமத்தையாவது தூவி ' குல தெய்வமே, எனக்கு உன்னை அடையாளம் காட்டுவாயா' என பிரார்த்தனை செய்து வணங்கி வர வேண்டும். வேறு எந்த பூஜையும் செய்யத் தேவை இல்லை. ஆனால் நிச்சயமாக அவரவர் பிராப்தம் போல எப்போது அவர்களுக்கு தன்னைப் பற்றிய விவரம் தெரிய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுமோ அப்போது அவர்களுக்கு குல தெய்வம் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் என்பதில் சற்றும் சந்தேகம் கிடையாது. எப்போது அவர்கள் தமது குல தெய்வத்தை அடையாளம் கண்டு கொள்கின்றார்களோ அதன் பின் அவர்கள் எப்போது அந்த ஆலயத்துக்கு செல்வார்களோ அப்போது தமது குல தெய்வமாக வணங்கி வந்த மண் பொம்மையை எடுத்துக் கொண்டு அந்த ஆலயத்தில் குல தெய்வத்தை வணங்கியப் பின் ஆலய ஸ்தல விருஷத்தின் கீழ் அல்லது ஆலயத்திலேயே ஏதாவது ஒரு மூலையில் அந்த பொம்மையை வைத்துவிட்டு வருவார்கள். அல்லது ஆலயத்தில் குளம் இருந்தால் அந்த நீரில் அதைப் போட்டு விட்டு வருவார்கள்'' . என்று கூறினார். குல தெய்வம் என்பது எத்தனை ஜென்மங்களுக்குப் பொருந்தும், வம்சக் கணக்கு என்பது என்ன என்ற கேள்வி எழுந்தபோது அவர் கூறிய கீழே தந்துள்ள விவரங்கள் ஆச்சர்யமாக இருந்தன.

குல தெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு
ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்?

சாதாரணமாக ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் குடும்பங்களைக் காப்பாற்றும் என்பது பெரிய நம்பிக்கை. ஏழேழு ஜென்மம் என்பது 7x7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. 49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13 . இந்த எண்தான் ஒருவருடைய வம்சத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண். ஒருவர் இறந்து விட்டால் பதிமூன்றாம் நாள் அன்று கிரேக்கியம் என்ற நல்ல காரியத்தை செய்வது பழக்கம். அன்றுதான் உடலை விட்டு வெளியேறிய ஆத்மா சொர்கத்தை அடைகின்றது என்று நம்புகிறோம்.
அது போலத்தான் இறுதிக் காலமாக 13 என்ற அந்த காலத்தைக் குறிக்கும் விதத்தில் 49 ஜென்ம காலமான 13 ஜென்மத்துடன் ஒரு வம்சம் முடிவடைகின்றது என்று நம்பப்படுகின்றது . அதாவது எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் அந்த வம்சத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஏழேழு ஜென்மங்களுக்கு மேல் எந்த வம்சத்தினரும் இருக்க மாட்டார்கள். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு - வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்.

வம்சக் கணக்கு என்பது என்ன?
வம்சம் என்பது எப்படி கணக்கிடப்படுகின்றது?

 ஒருவருக்கு பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன் என ஆண் குழந்தை மட்டுமே வம்சத்தில் கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 50 என்றால் கூட அவருடைய தாத்தாவின், தாத்தாவின் பெரும் தாத்தாவின் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தய காலம் எனக் கணக்கிட்டால் 13 x 50 = 650 ஆண்டுகள் என வரும். யாருக்காவது 650 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அவர் சந்ததியினர் யார் என்பது தெரியுமா? அதை விட சிறிய கேள்வி, யாருக்காவது அவர்களுடைய குடும்பத்தில் 13 ஆம் வம்சத்தின் பெரிய தாத்தா யார் என்பது தெரியுமா? இதையெல்லாம் யார் குறித்து வைத்துக் கொண்டு வருகிறார்கள்? அதனால்தான் ஒரு குல தெய்வம் ஏழேழு ஜென்மம் அதாவது 49 ஜென்மங்களுக்கு அதாவது 13 ஜென்ம காலத்துக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும் என்ற வார்த்தை வந்தது.

மகள் என்பவள் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய்-தந்தையின் குல தெய்வத்தை தனது குல தெய்வமாக ஏற்க பாத்யதை இல்லை. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடும்.

பலருக்கு குல தெய்வம் யார் என்பது
ஏன் தெரியாமல் உள்ளது?

இதற்குக் காரணம் பூர்வ ஜென்மத்தில் ஏற்பட்ட சாபம் அல்லது முன்னோர்கள் செய்த அலட்சியமே காரணம் . முன்னர் எல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தமது மகன்களுக்கு தாம் வணங்கும் குல தெய்வம் யார், அந்த ஆலயம் எங்கு உள்ளது என்பதைக் கூறுவார்கள். சில வருடங்களுக்கு ஒரு முறையாவது தமது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று பூஜித்து விட்டு வருவார்கள். வீடுகளில் குல தெய்வ உண்டியல் இருக்கும். அதில் தமது காணிக்கைகளை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அவ்வபோது தாம் போக முடியாவிடிலும் குடும்பத்தில் யார் அங்கு செல்கிறார்களோ அவர்களிடம் அந்த காணிக்கைப் பணத்தை தந்து உண்டியலில் சேர்த்து விடுமாறு கூறுவார்கள். தமது பிள்ளைகள் வெளியூருக்குப் போகும்போது அவர்களுக்கு குல தெய்வம் யார் என்பதைக் கூறி குல தெய்வத்தின் படத்தையும் தருவார்கள். அது மட்டும் அல்ல எந்த ஒரு நல்ல காரியமும் வீட்டில் நடக்கும்போது, முதல் பிரார்த்தனை குல தெய்வத்திற்குத்தான் நடைபெறும். அதற்குப் பின்னரே மற்ற பூஜைகள் துவங்கும்.

ஆனால் காலபோக்கில் ஏற்பட்ட நாகரீக மாற்றங்களினால் வெளியூர் செல்லும் பிள்ளைகள் குல தெய்வம் என்ற கருத்தை மறந்து விட்டார்கள். தங்கும் இடமே என்ன என்பது தெரியாதபோது குல தெய்வத்தின் நினைவு அவர்களுக்கு எப்படி இருக்கும். குல தெய்வத்தின் படம் கூட அவர்களிடம் இருக்காது. திருமணம் ஆகி வேலைக்கு சென்றதும் கிடைக்கும் விடுமுறை நாட்களிலும் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வெளியே செல்வதும், வெளியூர் செல்வதும் பழக்கமாகி விட்டது. ஆனால் சில வருடங்களுக்கு ஒரு முறையாவது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று வணங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இல்லை. குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு மொட்டை அடிக்கும்போது மட்டுமே குல தெய்வத்தை தேடுவார்கள். அது தெரியவில்லை என்றால் அதுவும் ஒரு சடங்கு போல பழனி, திருப்பதி அல்லது வைதீஸ்வரன் ஆலயம் என எங்காவது சென்று மொட்டைப் போட்டு விட்டு வந்து விடுவார்கள்.

அது மட்டும் அல்லாமல் காலப் போக்கில் தமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முடிவு தேட புதுப் புது சாமியார், சன்யாசிகள் மற்றும் தெய்வப் பிறவிகள் என ஓடுகிறார்கள். அவர்கள் கூறுவதை செய்வார்கள். ஆனால் தம்முடைய குல தெய்வத்தை நினைக்க மாட்டார்கள். அதற்கு மேலும் அந்த சாது, சன்யாச, தெய்வப் பிறவிகளும் முதலில் உங்கள் குல தெய்வத்திற்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற நியதியை அறிவுறுத்த மாட்டார்கள். அப்படி செய்தால் அவர்கள் என்ன ஆவது ?

இப்படி எல்லாம் இருப்பதினால்தான் குல தெய்வத்தை மறந்து விடுபவர்களும், குலதெய்வ சிந்தனை இல்லாமல் இருப்பவர்களும், அப்போது தம்மையே அறியாமல் ஒரு சடங்கு போல வீட்டில் நடக்கும் அனைத்து பூஜை, பண்டிகைகளையும் கொண்டாடும்போது தாம் குல தெய்வத்தை மறந்து விட்டோமே என்ற எண்ணம் இருப்பது இல்லை. அப்படி செய்யும் தவறு தெரிவது இல்லை. என்னதான் எந்த ஆலயத்தில் சென்று சடங்கை செய்தாலும் குல தெய்வத்தை மறப்பது பெற்றோர்களையே மறப்பது போன்றதே என்ற தவறு தெரிவது இல்லை. அதனால் அவர்கள் குல தெய்வத்தின் சாபங்களுக்கு ஆளாகி விட அது அவர்கள் வம்சத்தை பல வகைகளிலும் பாதிக்கின்றது. அந்த குல தெய்வ சாபம் அந்த குடும்பத்தினருக்கு தொடரும்.

இந்த விவரங்கள் எத்தனை பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது தெரியாது. ஆனால் எனக்கு கிடைத்த தகவலை எப்போதும் போலவே அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள இங்கு பிரசுரித்துள்ளேன்..

வாழ்க வளமுடன்.....

"Interest to reading & watching படித்ததில் & பார்த்ததில் பிடித்தது"


8.இயற்பகை நாயனார்

பெயர்: இயற்பகை நாயனார்
குலம்: வணிகர்
பூசை நாள்:மார்கழி உத்திரம்
அவதாரத் தலம்:பல்லவனீச்சரம்
முக்தித் தலம்:சாய்க்காடு

வரலாறு சுருக்கம்:

“இல்லையே எனாத இயற்பகைக்கு அடியேன்”
என்று திருத்தொண்டத் தொகை வர்ணிக்கிறது இயற்பகை நாயனாரை. இவர் இயற்பகையார் நாயன்மார்களுள் ஒருவர் ஆவார். சோழநாட்டிலே காவேரிசங்கமம் என்னும் புனித தீர்த்தத்தினால் புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினத்திலே பிறந்தார்.பெரும் செல்வராக விளங்கினார். இல்லறத்தின் பெரும்பேறு இறையடியார் தம் குறைமுடிப்பதென்பது அவர் கொள்கை. ஆதலால் சிவனடியார் யாவரெனினும் அவர் வேண்டுவதை இல்லையெனாது கொடுக்கும் இயல்பினராய் வாழ்ந்துவந்தார்.

அவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் அவர் பெருமையை உலகோர்க்கு உணர்த்தச் சிவபெருமான் திருவுளம் பற்றினார்.
சிவபெருமான் தூய
திருநீறு பொன்மேனியில் அணிந்து, தூர்த்த வேடமுடைய வேதியர் கோலத்தினராய், இயற்பகையாரது வீட்டினை அடைந்தார்.

நாயனார் அவ்வடியாரை உளம் நிறைந்த அன்புடன் எதிர்கொண்டு, முனிவர் இங்கு எழுந்தருளியது என் பெருந்தவப் பயனென்று வழிபட்டு வரவேற்றார். வேதியர் அன்பரை நோக்கி சிவனடியார்கள் வேண்டியனவற்றை எல்லாம் ஒன்றும் மறுக்காது உம்மிடத்திலே ஒரு பொருளை விரும்பி இங்கு வந்தேன், அதனை நீர் தருவதற்கு இணங்குவீராயின் வெளியிட்டுச் சொல்வேன் எனக் கூறினார்.

இயற்பகையார், என்னிடமிருக்கும் எப்பொருளாயினும் அது எம்பெருமானாகிய சிவனடியாரது உடைமை. இதிற் சிறிதும் சந்தேகமில்லை. நீர் விரும்பியதனை அருளிச் செய்வீராக என்றார்.

வேதியர், ‘உன் மனைவியை விரும்பி வந்தேன்" என கூறினார்.

நாயனார் முன்னைவிட மகிழ்ச்சியடைந்து ‘எம்பிரான் என்னிடம் உள்ள பொருளையே வேண்டியது எனது புண்ணியப் பயனாகும்’ எனக் கூறி, விரைந்து வீட்டினுள் புகுந்து கற்பிற்சிறந்த மனைவியாரை நோக்கி ‘பெண்ணே! இன்று உன்னை இம் மெய்த்தவர்க்கு நான் கொடுத்துவிட்டேன்’ என்றார் இயற்பகை நாயனார்.

அதுகேட்ட மனனவியார் , மனங்கலங்கிப் பின் தெளிந்து தன் கணவரை நோக்கி “என் உயிர்த் தலைவரே! என் கணவராகிய நீர் எமக்குப் பணித்தருளிய கட்டளை இதுவாயின் நீர் கூறியதொன்றை நான் செய்வதன்றி எனக்கு வேறுரிமை உளதோ? என்று சொல்லிப் தன் பெருங் கணவராகிய இயற்பகையை வணங்கினார். இயற்பகையாரும் இறைவனடியார்க்கெனத் தம்மால் அளிக்கப் பெற்றமை கருதி அவ்வம்மையாரை வணங்கினார்.

திருவிலும் பெரியாளாகிய அவ்வம்மையார், அங்கு எழுந்தருளிய மறைமுனிவர் சேவடிகளைப் பணிந்து திகைத்து நின்றார்...

மறை முனிவர் விரும்பிய வண்ணம், மனைவியாரைக் கொடுத்து மகிழும் மாதவராகிய இயற்பகையார், அம்மறையவரை நோக்கி, இன்னும் யான் செய்தற்குரிய பணி யாது? என இறைஞ்சி நின்றார்.

வேதியராகிய வந்த இறைவன், ‘இந்நங்கையை யான் தனியே அழைத்துச் செல்லுவதற்கு உனது அன்புடைய சுற்றத்தாரையும், இவ்வூரையும் கடத்தற்கு நீ எனக்குத் துணையாக வருதல் வேண்டும்’ என்றார்.

அதுகேட்ட இயற்பகையார் யானே முன்னறிந்து செய்தற்குரிய இப்பணியை விரைந்து செய்யாது எம்பெருமானாகிய இவர் வெளியிட்டுச் சொல்லுமளவிற்கு காலம் தாழ்த்து நின்றது பிழையாகும் என்று எண்ணி, வேறிடத்துகுச் சென்று போர்க்கோலம் பூண்டு
வாளும் கேடமும் தாங்கி வந்தார்.

வேதியரை வணங்கி மாதினையும் அவரையும் முன்னே போகச் செய்து அவர்க்குத் துணையாக பின்னே தொடர்ந்து சென்றார்.

இச்செய்தியை அறிந்த மனைவியாராது சுற்றத்தாரும், வள்ளலாரது சுற்றத்தாரும் இயற்பகைப் பித்தனானால் அவன் மனைவியை மற்றோருவன் கொண்டுப்போவதா?” என வெகுண்டனர்”. தமக்கு நேர்ந்த பழியைப் போக்குவதற்கு போர்க்கருவிகளைத் தாங்கியவராய் வந்து மறையவரை வளைத்துக் கொண்டனர்.

‘தூர்தனே போகாதே நற்குலத்திற் பிறந்த இப்பெண்ணை இங்கேயே விட்டுவிட்டு எமது பழிபோக இவ்விடத்தை விட்டுப்போ’ எனக்கூறினார் சொந்தபந்தங்கள்.

மறைமுனிவர் அதுகண்டு அஞ்சியவரைப்போன்று மாதினைப் பார்த்தார். மாதரும் ‘இறைவனே அஞ்சவேண்டாம்; இயற்பகை வெல்லும்’ என்றார். வீரக்கழல் அணிந்த இயற்பகையார், அடியேனேன் அவரையெல்லாம் வென்று வீழ்த்துவேன் என வேதியருக்கு தேறுதல்கூறி,

போருக்கு வந்த தம் சுற்றத்தாரை நோக்கி, ‘ஒருவரும் எதிர் நில்லாமே ஓடிப்பிழையும். அன்றேல் என் வாட்படைக்கு இலக்காகித் துணிபட்டுத் துடிப்பீர்’ என்று அறிவுறுத்தினார்.

அது கேட்ட சுற்றத்தவர், ‘ஏடா நீ என்ன காரியத்தைச் செய்துவிட்டு இவ்வாறு பேசுகிறாய்’. உன் செயலால் இந்நாடு அடையும் பழியையும், இது குறித்து நம் பகைவரானவர் கொள்ளும் இகழ்சிச் சிரிப்பினையும் எண்ணி நாணாது உன் மனைவியை வேதியனுக்கு கொடுத்து வீரம் பேசுவதோ! நாங்கள் போரிட்டு ஒருசேர இறந்தொழிவதன்றி உன்மனைவியை மற்றையவனுக்குக் கொடுக்க ஒருபொழுதும் சம்மதிக்கோம்’ என்று வெகுண்டு எதிர்த்தனர்.

அது கண்ட இயற்பகையார் ‘உங்கள் உயிரை விண்ணுலகுக்கு ஏற்றி இந்த நற்றவரை தடையின்றிப் போகவிடுவேன்’ என்று கூறி, உறவினரை எதிர்த்துப் போரிடுவதற்கு முந்தினார். உறவினர்கள் மறையவரை தாக்குவதற்கு முற்பட்டனர். அதுகண்டு வெகுண்ட இயற்பகையார், சுற்றத்தார் மேல் பாய்ந்து இடசாரி வலசாரியாக மாறிமாறிச் சுற்றிவந்து அவர்களுடைய கால்களையும் தலைகளையும் துணித்து வீழ்த்தினார்.

பலராய் வந்தவர் மீதும் தனியாய் அகப்பட்டவர் மீதும் வேகமாய்ப் பாய்ந்து வெட்டி வீழ்த்தினார். பயந்து ஓடியவர் போக எதிர்த்தவரெல்லாம் ஒழிந்தே போயினர். எதிர்ப்பவர் ஒருவருமின்றி உலாவித் திரிந்த இயற்பகையார், வேதியரை நோக்கி, ‘அடிகள் நீர் அஞ்சாவண்ணம் இக்காட்டினைக் கடக்கும் வரை உடன் வருகின்றேன்’ என்று கூறித் துணைசென்றார்.

திருச்சாய்க்காட்டை சேர்ந்த பொழுதில், மறை முனிவர் ‘நீர் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்.’ என்று கூறினார். இயற்பகையாரும் அவரை வணங்கி ஊருக்குத் திரும்பினார்.
மனைவியாரை உவகையுடன் அளித்து திரும்பியும் பாராது செல்லும் நாயனாரது அன்பின் திறத்தை எண்ணி இறைவன் மகிழ்ந்தார். மெய்ம்மையுள்ளமுடைய நாயனாரை மீளவும் அழைக்கத் தொடங்கி “இயற்பகை முனிவாஓலம்’ ஈண்டு நீ வருவாய் ஓலம்; அயர்பிலாதானே ஓலம்; செயற்கருஞ்செய்கை செய்த தீரனே ஓலம் ஓலம்” என அழைத்தருளினார்.

அழைத்த பேரோசையினைக் கேட்ட இயற்பகையார், ‘அடியேன் வந்தேன்; வந்தேன்; தீங்கு செய்தார் உளராயின் அவர்கள் என் கைவாளுக்கு இலக்காகின்றார்’. என்றுகூறி விரைந்து வந்தார்.

மாதொருபாகனாகிய இறைவனும் தனது தொன்மைக் கோலத்தைக் கொள்ளுவதற்கு அவ்விடத்தைவிட்டு மறைந்தருளினார். சென்ற இயற்பகையார் முனிவரைக் காணாது அவருடன் சென்ற மாதினைக் கண்டார். வான்வெளியிலே இறைவன் மாதொருபாகராக எருதின்மேல் தோன்றியருளும் தெய்வக் கோலத்தைக் கண்டார்.

நிலத்திலே பலமுறை தொழுதார் இயற்பகை நாயனார்; எல்லையில்லாத இன்ப வெள்ளம் அருளிய இறைவன் உளங்கசிந்து போற்றி வாழ்த்தினார். அப்பொழுது அம்மையப்பராகிய இறைவர் ‘பழுதிலாததாய் உன் அன்பின் திறங்கண்டு மகிழ்ந்தோம். உன் மனைவியுடன் நம்மில் வருக’ எனத் திருவருள் புரிந்து மறைந்தருளினார்.

உலகியற்கை மீறிச் செயற்கருஞ் செய்கை செய்த திருத்தொண்டராகிய இயற்பகையாரும், தெய்வக் கற்பினையுடைய அவர் தம் மனைவியரும் ஞானமாமுனிவர் போற்ற நலமிகு சிவலோகத்தில் இறைவனைக் கும்பிட்டு உடனுறையும் பெருவாழ்வு பெற்றனர். அவர் தம் சுற்றத்தாராய் அவருடன் போர் செய்து உயிர் துறந்தவர்களும் வானுலகமடைந்து இன்புற்றனர்.
ஒப்புமைக் கதைகள் மனைவியைப் போலிச் சிவனடியாருக்குக் கொடுத்த கதைகள் பல உள்ளன. அவை அனைத்தும் இந்த நிகழ்வுக்குக் காலத்தால் பிற்பட்டவை...

4. அரிவாட்டாய நாயனார்

பெயர்: தாயனார்
குலம்: வேளாளர்
பூசை நாள் :தை திருவாதிரை
அவதாரத் தலம்:கணமங்கலம்
முக்தித் தலம்:கணமங்கலம்

வரலாறு சுருக்கம்:

சோழமண்டலத்திலே, கணமங்கலம் என்கின்ற ஊரிலே; வேளாளர்குலத்திலே, சிவபத்தியிற் சிறந்தவரும், இல்லறத்தை ஒழுங்காக நடத்துகின்றவரும், மிகுந்த செல்வமுள்ளவருமாகிய தாயனார் என்பவர் ஒருவர் இருந்தார்.

அவர் பரமசிவனுக்குச் செந்நெல்லரிசியும் செங்கீரையும் மாவடுவும் தினந்தோறுங் கொண்டுபோய், திருவமுது செய்வித்து வருவார். இப்படி நிகழுங்காலத்திலே, கடவுளுடைய திருவருளினால் அவருக்கு வறுமை உண்டாயிற்று. உண்டாகியும், அவர் கூலிக்கு நெல் அறுப்பவராகி, தாங்கூலியாகப் பெற்ற செந்நெலெல்லாம் சுவாமிக்குத் திருவமுது செய்வித்து, கார் நெல்லைக்கொண்டு; தாஞ்சீவனம் செய்து வந்தார்.

செய்யுநாளிலே, பரமசிவன் அவ்வூரிலிருக்கின்ற வயல்களிலுள்ள நெல்லெல்லாம் செந்நெல்லாகும்படி அருள்செய்ய; தாயனார் மனமகிழ்ந்து, நாள்தோறும் வயல்களுக்குப் போய் நெல்லறுத்து, கூலி வாங்கி, "இப்படிக் கிடைத்தது அடியேன் செய்த புண்ணியத்தால்" என்று சுவாமிக்கு மிகத் திருவமுது செய்விப்பாராயினார்.

இப்படி நடக்கின்றபடியால், நாடோறும் உணவில்லாமை பற்றி, மனைவியார் வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்திற்குப் போய், இலைக்கறி கொய்து சமைத்து வைக்க; தாயனார் அதையுண்டு முன்போலத் தாஞ்செய்யும் திருப்பணியைச் செய்தார். செய்யுநாளிலே, தோட்டத்திலுள்ள இலைக்கறியெல்லாம் அற்றுப்போக, மனைவியார் தண்ணீர் வார்க்க, அதனைப் பானம்பண்ணி, திருப்பணியைச் செய்து வந்தார்.

இப்படிச் செய்துவருநாளிலே ஒரு நாள், முன்போலச் சுவாமிக்குத் திருவமுது செய்விக்கும் பொருட்டுச் செந்நெலரிசியும் செங்கீரையும் மாவடுவும் கூடையில் வைத்துச் சுமந்துகொண்டு போக; மனைவியார் பஞ்சகவ்வியங்கொண்டு அவருக்குப் பின்னால் நடந்தார்.

முன் செல்கின்ற தாயனார் பசியினாலே கால் தள்ளாடித் தவறி விழ, மனைவியார் பஞ்சகவ்வியக் கலயத்தை மூடியிருந்த கையினால் அவரை அணைத்தார். அணைத்தும், பயன் இல்லை கூடையிற் கொண்டவை எல்லாம் கமரிற் (நிலத்திற்) சிந்தின, அது கண்டு தாயனார், “இனி அங்கு ஏன் போதல் வேண்டும்?” என வருந்தினார்.

“அளவில்லாத தீமையுடையேன், இறைவன் அமுது செய்யும்பேறு பெற்றிலேன்” என்று உறுபிறப்பினை அரிவார் போன்று அரிவாள் கொண்டு உள்ளந்தண்டு அறும்படி கழுத்தினை அரியத்தொடங்கினார்.

அப்பொழுது கமரின்றும் அம்பலத்தாடும் ஐயரது வீசிய கையும், மாவடு அருந்தும் “விடேல் விடேல்” என்று ஓசையும் உடனே ஒருங்கு எழுந்தன. இறைவரது திருக்கை அன்பரது கழுத்தரியும் திண்ணிய கையினைப் பிடித்துக் கொள்ளவே, அவரும் அச்செயல் தவிர்த்தனர். அரிந்த ஊறும் நீங்கியது.

அன்பனார் அஞ்சலி கூப்பி நின்று “அடியேனது அறிவில்லாமையைக் கண்டு என் அடிமை வேண்டிக் கமரின் வந்து இங்கு அமுது செய்தருளும் பரனே போற்றி” என்று பலவாறு துதித்து வணங்கினார். இறைவர் இடப வாகனராய்த் தோன்றி ‘நீ புரிந்த செய்கை நன்று! உன் மனைவியுடனே கூட நம் உலகில் என்றும் வாழ்வாயாக!” என்று அருளிச் செய்து, அவர் உடனே அடிசேர, திரு அம்பலத்தில் எழுந்தருளினார்.

தாயனவர் தம் கழுத்தை அரிவாள் பூட்டி அறுத்த காரணத்தால் அரிவாட்டாய நாயனார் எனும் திருநாமத்தைப் பெற்றார். 63 நாயன்மார்களில் ஒருவராக மாறினார்.

7.இடங்கழி நாயனார்

பெயர்: இடங்கழி நாயனார்
குலம்: வேளிர்
பூசை நாள்: ஐப்பசி கார்த்திகை
அவதாரத் தலம்: கொடும்பாளூர்
முக்தித் தலம்: கொடும்பாளூர்

வரலாறு சுருக்கம்:

அனைத்து செல்வமும் சிவனுக்கே உயிர்காக்கும்.

காணப்படும் இவ்வுலகமும் இவ்வுலகத்துப் பொருள்களும் வியத்தகு விரிவும் அளப்பரும் விசித்திர விநோதங்களும் உடையனவாயிருத்தலின் அவையாவும் முற்றறிவும் முழுத்த பேராற்றலும் உள்ள ஒருவன் படைப்பாதல் பெறப்படும்.

தேவாரத்தில் "ஓருரு வாயினை மானாங்காரத் தீருருவாயொரு விண்முதல் பூதலம் படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை" - "உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனிபேதம் நிரைசேரப் படைத்தவற்றி னுயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான் கோயில்" எனவும் திருக்கோவையாரில் "ஏழுடையான் பொழில் எட்டுடையான் புயம்" எனவும் திருமந்திரத்தில் "ஒருவனுமே யுலகேழும் படைத்தான் ஒருவனுமே யுலகேழும் அளித்தான் ஒருவனுமே யுலகேழுந் துடைத்தான் ஒருவனுமே யுலகோ டுயிர்தானே" எனவும் வருவனவற்றால் விளங்கும்.

இவற்றில், "அங்கங்கே நின்றான், பொழில் (புவனம்) ஏழுடையன் உலகோடுயிர்தானே" எனவருவன இறைவன் உலகையும் உலகப் பொருள்களையும் படைத்தது மாத்திரமன்றி அவன் அவற்றைத் தன்னுடைமை யாகவே கொண்டுள்ளான் எனவும் "தானலா துலகமில்லை" எனத் துணியப்படுமளவுக்கு உலகுயிர் அனைத்திலும் வசித்துக் கொண்டிருக்கின்றான் எனவும் தெரிவித்து நிற்றல் காணலாம்.

அது, இறைவன் உலகைப் படைத்து அதனுட் புகுந்துள்ளான் (சர்வமிதம் அஸ்ருஜத ஸ்ருஷ்ட்வா தத் அநுப்ரவிஷ்ட்:) எனத் தைத்திரீய உபநிஷத்தினும், உலகமெல்லாம் ஈசனால் வசிக்கப்பெற்றுள்ளது (ஈசாவாஸ்யம் இதம் சர்வம்) என ஈசாவாஸ்ய உபநிடதத்தினும் வருவனவற்றாலும் வலுவுறும்.

ஆகவே, பொதுவிற் கருதப்படுவது போன்று உலகம் மனித ஆதீனத்துக்குட்பட்டதாதலும் உலகப் பொருள் மனித உடைமையோ உரிமையோ ஆதலும் இல்லையாகும். எனவே, இதே உலகில் இதே பொருள்களின் அநுசரணையுடன் வாழ விதிக்கப்பட்டுள்ளாராகிய மக்கள் யதார்த்தரீதியில் அவை சிவனுடைமையும் உரிமையுமானவை என்பதுணர்ந்து அதற்கமைவாம் கௌரவ கண்ணியத்துடனும் பயபக்தியுடனும் அவற்றில் தமக்கு வேண்டுவனவற்றை இறைவனுக்கே முதலில் அர்ப்பணித்துப் பிறகே தாம் ஏற்கவேண்டும் என்ற ஒழுங்கு நியதி சைவத்தில் இடம் பெறலாயிற்று.அப்படி சர்வமும் சிவனுக்கு சிவபக்தர்களுக்கு என்று அளித்து அறுபதுமூவரில் ஒருவராக ஈசன் அருள்புரிந்த ஒரு சிற்றரசரை பற்றி பார்க்க போகிறோம்...

"மடல் சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் அடியேன்"
திருத்தொண்டத் தொகை.

தில்லையம்பலத்துக்குப் பொன்வேய்ந்த ஆதித்தனுக்கு முன்னோராகச் சோழர் குடியில் தோன்றினார் இடங்கழி நாயனார்; கோனாட்டின் தலைநகராகிய
கொடும்பாளூரில் தங்கியிருந்து வேளிர் குலத்து அரசினை ஏற்று ஆட்சிபுரிந்தார்.

சைவநெறி வைதிகத்தின் தருமநெறியோடு தழைப்பத் திருகோயில்கள் எங்கும் வழிபாட்டு அர்சனைகள் விதிப்படி திகழச் செய்தார். சிவனடியார்கள் வேண்டுவனவற்றை விரும்பிக் கொடுக்கும் சீலமுடையவராய் ஒழுகினார்.

இவர் அரசு புரியும் நாளில் சிவனடியார்க்குத் திருவமுதளிக்கும் தவமுடைய அடியார் ஒருவர், உணவமைத்தற்குரியன எதுவும் கிடைக்காமல் மனம் தளர்ந்தார். அடியாரை அமுது செய்வித்தலிலுள்ள பேரார்வத்தால் செய்வதறியாது அரசர்க்குரிய நெற்பண்டாரத்திலே நள்ளிரவிற் புகுந்து
நெல்லைக் களவு செய்தார்.

அந்நிலையில் காவலர்கள் அவரைப் பிடித்து இடங்கழியராகிய மன்னர் முன் நிறுத்தினர்.

இடங்கழியார் அவரைப் பார்த்து, "நீர் ஏன் நம்முடைய நெற்பண்டாரத்தைக் கவர்ந்தீர்" எனக் கேட்டார்.

அதுகேட்ட அடியவர், "நான் சிவனடியார்களைத் திருவமுது செய்விக்கும் பொருளின்மையால் இவ்வாறு செய்தேன்" என்றார்,

இடங்கழிநாயனார் மிக இரங்கி, "எனக்கு இவரன்றோ பண்டாரம்" என்று சொல்லி, "சிவனடியார்களெல்லாரும் நெற்பண்டாரத்தை மாத்திரமின்றி மற்றை நிதிப் பண்டாரங்களையும் எடுத்துக் கொள்க" என்று எங்கும் பறை யறைவித்தார். பின்னும் நெடுங்காலம் திருநீற்றின் நெறி தழைக்கும்படி தண்ணளியோடு அரசியற்றிக்கொண்டிருந்து சிவபதத்தை அடைந்தார்.

அருள் வேந்தராகிய இவர் தண்ணளியால் நெடுங்காலம்
திருநீற்றின் ஒளி தழைப்ப அரசு புரிந்திருந்து சிவபதம் அடைந்தார்.

5.இசைஞானியார் நாயனார்

பெயர்: இசைஞானியார்
பால்: பெண்
குலம்: ஆதி சைவர்
பூசை நாள்: சித்திரை சித்திரை
அவதாரத் தலம்: திருநாவலூர்

அறுபத்து மூன்று நாயன்மார்களில் பெண் மூவரே ஆவர். அவர்களில் ஒருவரே இசைஞானியார்.

திருநாவலூரிலே ஆதிசைவர் மரபில் உதித்த சடையனாருக்கு வாழ்க்கைத் துணைவியாக  இருந்தவர் இசைஞானி அம்மையார் அரும்பெரும் தவம் புரிந்து சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் புதல்வராகப் பெற்றார் .சிவபக்தியும் பதிபக்தியும்  பூண்டு வாழ்ந்து முடிவில் முழுமுதற் கடவுளாம் பரமேஸ்வரனுடைய பதமலர் சேர்ந்து பரம சுகமுற்றார்

"ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசைஞானியார்" என்று சேக்கிழார் பெருமான் கூறுகின்றார்  குற்றமில்லாத கற்புடைய இவருடைய புண்ணியத்தின் திரட்சியே ஓர் உருவாக திரண்டு வந்தவர்,

சுந்தரமூர்த்தி நாயனார் ஆவார் உலகக் கேடுகளில் முதன்மையானது தீய மைந்தனை பெறுதல், நன்மைகளுள் முதன்மையானது தூய மைந்தனைப் பெறுதல் . ஆகவே திருத்தொண்டத்தொகை பாடி உலகம் உய்வித்த உத்தமப்புதல்வரை ஈன்ற அந்த  உத்தமியார் பெருமையை உரைக்கமுடியுமோ?அது எண்ணுக்குள்ளும் எழுத்துக்குள்ளும் அடங்காதது அதனை சேக்கிழார் பெருமான் இவ்வாறுகூறுகிறார்

"இசைஞானி காதலன் திருநாவலூர்கோன் அன்னவனாம்
ஆரூரன் அடிமை கேட்டுவப்பார் ஆரூரில் அம்மானுக்கன்பராவரே"

இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டியாரை என்சிறுபுன்
மொழியால் புகழ முடியுமோ முடியாதெவர்க்கும் முடியாதால்

அறுபது நாயன்மார்களுடன் இசை ஞானியாரின் குடும்பமும் சேர்ந்து அறுபத்து மூன்று நாயன்மார் ஆயினர். தாம், தம் கணவர், தம் புதல்வர் என்று குடும்பமே நாயன்மார்களாக உள்ள பெருமையைப் பெற்றனர். சடையனார் வாழ்க்கைத் துணைவியான இவ்வம்மையார் சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் பெற்றெடுத்துப் பெரும் பேறு பெற்று உய்ந்தார்கள். இச்சைவத் திருவாட்டியாரின் புண்ணிய பயனையும், பெருமையையும், புகழையும் உரைக்கத்தான் ஒண்ணுமோ ?

சித்தத்தைச் சிவன்பாற் வைத்து நித்தம் நித்தம் புற்றிடங்கொண்ட பெருமானின் ஞானக் கதிர்களாகிய திருத்தாள்களை போற்றிப் பணிந்து வந்தவாறு பரவை நாச்சியாருடன் இன்புற்று வாழ்ந்து வந்தார் சுந்தரர். இவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் இவருக்கு சேரமான் பெருமாள் நாயனாரைக் கண்டுவர வேண்டும் என்ற காதல் உள்ளத்திலே ஊற்றெடுத்து பெருகியது. ஒரு நன்னாள் பரவையாரிடம் விடை பெற்றுப் பூங்கோவில் அமர்ந்து பெருமானின் பொற்கழல்களை பணிந்து அடியார் புடைசூழ திருவஞ்சைக்களம் புறப்பட்டார்.

சோழநாட்டுத் தலங்களை கண்குளிரக் கண்டு வணங்கியவாறு கொங்கு நாட்டிலுள்ள திருப்புக கொளியூரை அடைந்தார். வேதியர் வாழ்கின்ற தேரோடும் திருவீதி வழியாக வந்து கொண்டிருந்த சுந்தரர் அவ்வீதியில் எதிர் எதிராக அமைந்துள்ள இரு வீட்டில் நடந்த நிகழ்ச்சியை கண்ணுற்றார். ஒரு வீட்டில் அலங்காரமும் ஆனந்தமும் பொங்கிப் பெருகி, மங்கல வாத்தியங்கள் முழங்கியவாறு இருக்க மற்றொரு வீட்டில் அமங்கலமான தோற்றமும், அழுகையும் நெஞ்சை உருக்கும் சோகக் காட்சியும் இருக்கக் கண்டார்.சுந்தரர், அங்குள்ளோரிடம்,

இவ்விரு வீட்டார்க்கும் உள்ள இன்ப துன்பங்களுக்கு காரணம் யாது? என்று வினவினார். அதற்கு அந்தணர்கள், சுவாமி! இவ்விரு வீட்டிலும் இருந்த இரு சிறுவர்கள், அருகிலுள்ள மடுவிற்கு நீராடச் சென்றார்கள். அதில் ஒருவனை முதலை விழுங்கி விட்டது. தப்பிப் பிழைத்த மற்றொருவனுக்கு இப்பொழுது உரிய பருவம் வந்ததும் பெற்றோர்கள் முப்புரி நூல் அணியும் சடங்கினைச் செய்து மகிழ்கிறார்கள் என்றனர். இதற்குள் அச்சிறுவனை இழந்து அழுது கொண்டிருந்த பெற்றோர்கள், சுந்தரர் எழுந்தருளியுள்ளார் என்று கேள்வியுற்று

வேதனையை மறந்த நிலையில் விரைந்தோடி வந்து அவரது திருவடித் தாமரைகளைப் பணிந்தனர். அருகிலுள்ளோர் மூலம் சிறுவனை இழந்த பெற்றோர்கள் இவர்கள்தான் என்பதைத் தெரிந்து கொண்ட சுந்தரர், சோகம் நீங்கி; முகமலர்ச்சியுடன் தம்மை வந்து வணங்கிய பெற்றோர்களைக் கண்டு, நீங்களா மகனை இழந்தவர்கள்? என்று வியப்பு மேலிடக் கேட்டார். ஆமாம் சுவாமி ! அந்நிகழ்ச்சி நடந்து ஆண்டுகள் பல தாண்டிவிட்டன. ஆனால் இப்பொழுது ஐயன் எழுந்தருளியது கண்டு, நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். இம்மையில் நாங்கள் பெற்ற பேறு எவர் பெறுவர் என்று கூறி

மீண்டும் அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். அப்பெற்றோர்களின் அன்பிற்கும், பக்திக்கும் கட்டுப்பட்ட சுந்தரர் அவர்களது துயரை எப்படியும் தீர்ப்பது என்ற உறுதியில் அவர்களிடம் குழந்தையை விழுங்கிய மடு எங்குள்ளது? என்று கேட்டார். பெற்றோர்கள் சுவாமிகளை அழைத்துக்கொண்டு மடுவிற்குப் புறப்பட்டனர்.சுந்தரரைத் தொடர்ந்து சிவ அன்பர்களும் சென்றனர். மடுவின் கரையை அடைந்தனர். பெற்றோர்கள் சுந்தரரை வணங்கி, சுவாமி ! எங்கள் குலக் கொழுந்தை விழுங்கிய மடு இதுதான் என்று கூறினார். சுந்தரர் பெருமாளைத் தியானித்தார்.

ஆக்கவும், அழிக்கவும் வல்ல அவினாசியப்பரை துதித்து ஏற்றான் மறக்கேன் எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். தேமதூரத் தமிழில் நான்காவது பாட்டைப் பாடி முடிப்பதற்குள் பெரு முதலை ஒன்று நீரிலிருந்து வெளிப்பட்டு பிள்ளையைக் கரையில் கொண்டுவந்து உமிழ்ந்தது. அன்பு பெற்றோர்கள் ஓடிச்சென்று தங்களது பச்சிளம் பாலகனை வாரித் தழுவி உச்சிமோந்து அகமும், முகமும் மலர சிறுவனுடன் சுந்தரர் திருவடியைத் தொழுதனர். சுந்தரரின் தெய்வீகச் சக்தியைக் கண்டு பக்தர்கள் அதிசயித்து வியந்து போற்றினர்.

சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்க என்ற கோஷம் வானைப் பிளந்தது. சுந்தரர் அவர்களை வாழ்த்தி அருளினார். அவிநாசியப்பர் ஆலயம் சென்று, பாடிப் பேரின்பம் பூண்டு, மீண்டும் தமது பயணத்தைத் தொடர்ந்தார் சுந்தரர். சுந்தரரின் வியக்கத்தக்க அருட்செயலையும், தமது நகருக்கு எழுந்தருளுவதையும் கேள்வியுற்ற சேரர் கொடுங்கோளூரைக் கவின்பெற அலங்கரிக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். சுந்தரர் வருகையை நாடு முழுவதும் பறையறைந்து அறிவித்தார். சேரப் பெருந்தகையார் யானை மீது புறப்பட்டார். அணி, தேர், புரவி, ஆட்பெரும் படையுடனும்

மற்ற பரிவாரங்களுடனும், சிவ அன்பர்களுடனும், புறப்பட்ட சேர வேந்தன், சுந்தரரை எதிர்கொண்டு அழைக்க எல்லையிலேயே காத்திருந்தார். சுந்தரர் அன்பர்களுடன், தமது சிவயாத்திரையை முடித்தவாறு எல்லையை வந்தடைந்ததும் சேரப் பெருந்தகையார் யானையினின்றும் இறங்கினார். விரைந்தோடிச் சென்று சுந்தரரை ஆரத்தழுவினார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரை ஆரத்தழுவி அகமகிழ்ந்தார். கடல் வெள்ளம்போல் திரண்டு வந்த மக்கள் விண்ணெட்ட வாழ்த்தொலி எழுப்பினர்.முரசு ஒலிக்க - சங்கு முழக்க - பறை அலற - மேள தாளங்கள் சிவநாமத்தோடு பொங்கி எழ,

சேரமான் பெருமாள் சுந்தரரைத் தாம் அமர்ந்து வந்த யானை மீது அமரச் செய்தார். தாமும் பின்னால் அமர்ந்து, வெண் கொற்றக் குடையினைப் பிடித்தார். அனைவரும் அரண்மனையை அடைந்தனர். மன்னனின் எல்லையில்லாப் பக்திக்குத் தலைவணங்கி எல்லையில் கூடியிருந்த பக்தர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இரு ஞானமூர்த்திகளும் அரண்மனைக்குள் எழுந்தருளினர். சேரமான் பெருமாள் சுந்தரரைத் தமது அரியணையில் அமரச் செய்து வழிபாடு புரிந்து இன்புற்றார். இரு சிவச் செல்வர்களும் மாகோதை மாநகரில் இருந்தவாறே அடுத்துள்ள சிவத்தலங்கள் பலவற்றிற்குச் சென்று

பதிகம் பாடிப் பரமனைக் கண்டுகளித்து வந்தனர். மாகோதை நகரில் குடிகொண்டிருக்கும் எம்பெருமானை வழிபட்டு வரும் சேரரும், சுந்தரரும், ஆலயத்துள் செல்லும் முன் அடுத்துள்ள அழகிய பொய்கையில் நீராடிச் செல்வது வழக்கம். ஒருநாள் இருவரும் பொய்கையில் நீராடிக் கொண்டிருக்கும்பொழுது சுந்தரர் மட்டும், சற்று முன்னதாகவே நீராடலை முடித்துக்கொண்டு இறைவன் திருமுன்னே வழிபடச் சென்றார். சுந்தரரின் உடல் புளகம் போர்த்தது; உள்ளத்திலே அருள் உயர்வு பொங்கி எழுந்தது. சைவப் பழமான சுந்தரர் பேரொளிப் பிழம்புபோல் ஆனார்.

அவர் கண்களில் கண்ணீர் பெருகியது. எம்பெருமான் திருமுன் பன்முறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கி எழுந்தார். அவரை அறியாத உள்ளக்கிளர்ச்சியும், உடல் நெகிழ்ச்சியும் அவருக்கு உலக மாயையிலிருந்து விடுபடும் பேரின்ப சக்தியைக் கொடுத்தது.அருளே வடிவான சுந்தரர் தலைக்குத் தலைமாலை என்னும் பதிகத்தைக் கயிலையரசன் செவிகுளிரப் பாடிப் பரவினார். சுந்தரரின் செந்தமிழ்த் தேன் அமுதத்தை அள்ளிப் பருகி மெய்யுருகிய நீலகண்டர் தமது அன்பு ஆலால சுந்தரரைத் திரும்பவும் தம்மோடு அழைத்துக் கொள்ளத் திருவுள்ளங் கொண்டார்.

அதற்கேற்ப எம்பெருமான் அமரர்களை அழைத்து ஆலாலசுந்தரரை வெள்ளை யானையில் அழைத்து வருவீர்களாக! என்று ஆணையிட்டார். அமரர்கள் வெள்ளை யானையுடன் புறப்பட்டு திருவஞ்சைக்களம் அடைந்தனர். ஆரூரைக் கண்டு வணங்கினர். ஆண்டவனின் ஆணையைக் கூறி வெள்ளை யானையில் அமர்ந்து கயிலைக்கு எழுந்தருளுமாறு கேட்டுக் கொண்டனர். அரனார் அருள் வாக்கிலே, செய்வதறியாது நின்ற சுந்தரர் எம்பெருமானை நினைத்து துதித்தார். தேவர்கள், அவரை வலம் வந்து வெள்ளை யானையின் மீது எழுந்தருளச் செய்தனர்.

சுந்தரர் தமது தோழராம் சேரர் நினைவாக வெள்ளை யானை மீதமர்ந்து விண்ணை நோக்கிப் புறப்பட்டார். அமரர்கள் மலர்மாரி பொழிந்தனர். பொய்கையினின்றும் வந்த சேரவேந்தன் சுந்தரரைக் காணாது திகைத்தார். சுந்தரர் திருக்கயிலை மலைக்கு வெள்ளை யானையில் எழுந்தருளுவதைத் தமது தபோ வலிமையால் அறிந்து கொண்டார் சேர மன்னர்; அக்கணமே தாமும் ஆரூரரைத் தொடர்ந்து செல்லத் திருவுள்ளங் கொண்டார். சோழன் வெண்புரவியில் அமர்ந்தார். குதிரையின் செவியில் நமச்சிவாய மந்திரத்தை இடையறாது ஓதினார். குதிரை காற்றினும் கடுகப் புறப்பட்டது.

வெள்ளை யானையை அணுகி, வலம் வந்தது. மன்னர் சுந்தரரை வணங்கி வழிபட்டார். மன்னர் புரவியில், யானைக்கு முன்னதாகவே கயிலைமலையை நோக்கிப் புறப்பட்டார். சுந்தரர் தம்மை வணங்கி முன்னால் செல்லும் மன்னனைக் கண்டார். தமக்குள் புன்முறுவல் பூத்தார்.வெள்ளை யானையில் வந்து கொண்டிருந்த சுந்தரர் தானெனை முன் படைத்தான் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடியவாறு கயிலைமலைக் கோவிலின் தென்திசை வாயிலை அடைந்தார். வேகமாக வந்த சேரமான் வாயில் அடைத்திருப்பது கண்டு திகைத்தார். அங்கேயே சுந்தரர் வருகையை எதிர்பார்த்து நின்றார்.

சுந்தரர் வந்தார். அங்கே நின்று கொண்டிருந்த சேரமான் பெருமாள் சுந்தரரை நமஸ்கரித்தார். இரு சிவச் செம்மல்களும் தமது வாகனங்களை விட்டிறங்கி, திருவாயில்கள் பலவற்றைக் கடந்து, திருவணுக்கன் திருவாயிலை அடைந்தார்கள். சேரர் அவ்வாயிலில் தடைபட்டு நின்றார். சுந்தரர் மட்டும் இறைவன் திருவருளாள் எம்பெருமான் திருமுன் சென்றார். பொன்மயமான கயிலை மாமலையில் வேத முழக்கங்களும், துந்துபி நாதங்களும் ஒலித்த வண்ணமாகவே இருந்தன. முனிவர்கள் சிரமீது கரம் உயர்த்தி சுந்தரரை வரவேற்றனர்.

தேவகணங்கள், கந்தர்வர்கள் கற்பக மலர் தூவித் துதித்துக் கொண்டிருக்க, எம்பெருமான் கற்பக வல்லியோடு எழுந்தருளியிருந்தார். இத்திருக்கோலக் காட்சியைக் கண்டு கண்களில் நீர் மல்க தாய்ப் பசுவைக் கண்டு விரைந்து வரும் இளங்கன்றைப் போல் ஆராக் காதலோடு ஐயன் திருமுன் சென்று அவரது கமலமலர்ப் பாதங்களை பணிந்து துதித்து நின்றார் சுந்தரர்! ஆலால சுந்தரரைக் கண்ட திருசடை அண்ணல், ஆனந்தப் பெருக்கோடு, ஆரூரனே நீ வந்தனையோ? என்று திருவாய் மலர்ந்து அருளினார். ஐயனின் அமுதமொழிக் கேட்டு அகமும் முகமும் மலர்ந்த சுந்தரர்,

ஐயனே ! இந்த ஏழையின் பிழை பொறுத்து, எம்மைத் தடுத்தாட் கொண்ட தெய்வமே! முடிவிலாத் தூய முத்தி நெறியினை அருளிய பெருங்கருணையை எடுத்தருளும் திறத்தினை எமக்கருள வில்லையே? என்று சொல்லி பலமுறை பணிந்து எழுந்து சிவானந்தப் பாற்கடலில் அழுந்தி நின்றார். பேரின்பப் பெருக்கில் மெய்யுருகி நின்ற தம்பிரான் தோழர், எம்பெருமானிடம், நிலவணிந்த நீரணி வேணிய! நின் மலர்க்கழல் சாரும் பொருட்டுச் சாரும் தவத்தையுடைய சேரமான் பெருமாள் திருவணுக்கன் திருவாயிற் புறத்தே தடைபட்டு நிற்கின்றார் என பணிவோடு பகர்ந்தார்.

சங்கரர் நந்திதேவரை அழைத்துச் சேரரை அழைத்துவர ஆணையிட்டருளினார். நந்திதேவர் இறைவன் ஆணைப்படி சேரரை அழைத்து வந்தார். எம்பெருமான் திருமுன் வந்த சேரமான் பெருமாள் நாயனார் உள்ளமும் உடலும் பொங்கப் பூரிக்க மெய்ம்மறந்து எம்பெருமானின் திருத்தாள்களில் பன்முறை வீழ்ந்து வணங்கி எழுந்தார். எம்பெருமானின் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பு தவழ சேரரை நோக்கி, எமது அழைப்பின்றி நீ ஏன் இவ்வளவு தொலைவு வந்தாய்? என திருவாய் மலர்ந்து அருளினார். சிரமீது கரங்குவித்து நின்ற சேரமன்னன் எம்பெருமான் திருமுன் தமது

பிரார்த்தனையைச் சமர்ப்பித்தார். இவ்வெளியோன் ஆரூரர் கழல் போற்றி ஐயன் திருமுன் அணையப் பெற்றேன். ஐயனின் கருணை வெள்ளத்தால், அடியேன் திருமுன்னே வந்து நின்று சேவித்து நிற்கும் பொன்னான பேறு பெற்றேன். இப்பொழுது இந்த எளியோனுக்குத் தேவரீர்! திருவருள் புரிய வேண்டும். ஆரூரரின் அரிய நட்பை இவ்வடியேனுக்கு தந்தருளிய வேத முதல்வனே ! எம்பெருமான் மீது பூண்டுள்ள ஆராக்காதலால் இவ்வடியேன் திருவுலா என்னும் பிரபந்தம் ஒன்று பாடினேன். அதனை ஐயன் திருச்செவி சாத்தி அருளப் பணிவோடு கேட்கின்றேன் என்று பிரார்த்தித்தார்.

எம்பெருமான் சொல்லுக ! எனச் சேரர்க்கு ஆணையிட்டருளினார். புலமைமிக்கச் சேரப் பெருந்தகையார் அருள்மிக்க ஞானவுலா என்னும் திருக்கயிலாய உலாவை மெய்யுருகப் பாடினார். எம்பெருமான் ஞான உலாவினைக் கேட்டு மகிழ்ந்தார். சேரரையும், சுந்தரரையும் சிவகணத் தலைவர்களாக, தமது திருவடி நிழலில் இருக்குமாறு வாழ்த்தி அருளினார். சேரமான் பெருமாள் நாயனார் சிவபிரானின் செஞ்சேவடிகளைத் துதித்து திருத்தொண்டு புரியலானார். சுந்தரமூர்த்தி நாயனார், முன்போல் ஆலால சுந்தரராய், இறைவனின் அணுக்கத் தொண்டராய்த் திருத்தொண்டு புரிந்து வரலானார்.

பூவுலகில் இருந்த பரவையாரும், சங்கிலியாரும் உலகப் பற்றை விட்டகன்று முன்போல் கமலினி, அனிநிந்தையாருமாகி உமாதேவியாரின் சேவடி போற்றும் சேடிகள் ஆயினர்.

6.ஆனாயநாயனார்

பெயர் : ஆனாயர்
குலம்: இடையர்
பூசை நாள் :கார்த்திகை ஹஸ்தம்
அவதாரத் தலம் :திருமங்கலம்
முக்தித் தலம் :திருமங்கலம்

வரலாறு சுருக்கம்:

“அலைமலிந்த புனல் ஆனாயற் கடியேன்”
–திருத்தொண்டத் தொகை

சோழவளநாட்டு மேன்மழநாடு மண்ணுலகிற்கு அருங்கலம் போன்றது.அது மங்கலமாகியது திருமங்கலம் என்ற மூதூர். அம்மூதூரில் வாழும் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார்.
அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர்; மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும்
சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேசாதவர்....

தமது குலத்தொழிலாகிய பசுக்காத்தலைச் செய்பவர். பசுக்களைச் சேர்த்து, அகன்ற புல்வெளியிற் கொண்டு சென்று, அச்சமும், நோயும் அணுகாமற்காத்து, அவை விரும்பிய நல்ல புல்லும், நன்னீரும் ஊட்டிப் பெருகுமாறு காத்துவருவார். இளங்கன்றுகள், பால்மறை தாயிளம்பசு, கறவைப்பசு, சினைப்பசு, புனிற்றுப்பசு, விடைக்குலம் என்பனவாக அவற்றை வெவ்வேறாக பகுத்துக் காவல் புரிவார். ஏவலாளர்கள் அவர் எண்ணிய வண்ணம் பணிவிடை செய்பவர்.

தாம் பசுக்களை மேயவிட்டு, புல்லாங்குழலிலே பெருமானரது அஞ்செழுத்தைப் பொருளாகக் கொண்ட கீதமிசைத்து இன்புற்றிருபபர்.இப்படி நியதியாக ஒழுகுபவர், ஒருநாள், தமது குடுமியிற் கண்ணி செருகி, நறுவிலி புனைந்து, கருஞ்சுருளின் புறங்காட்டி, வெண்காந்தப்பசிய இலைச்சுருளிற் செங்காந்தட் பூவினை வைத்துக் காதில் அணிந்து, கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச்சாத்தி, கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில்
திருநீற்றினை ஒளிபெறச் சாத்தி, அதனைத் திருமேனியிலும் மார்பிலும் பூசி, முல்லை மாலை அணிந்து, இடையில் மரவுரி உடுத்து அதன்மேல் தழைப்பூம்பட்டு மேலாடையினை அசையக் கட்டி, திருவடியில் செருப்புப் பூண்டு, கையினில் மென்கோலும் வேய்ங்குழலும் விளங்கக் கொண்டு, கோவலரும், ஆவினமும் சூழ சென்றார்.

அவர் தம்முடைய ஏவலாளராகிய மற்றை யிடையர்களோடும் பசுநிரைகளைக் காட்டுக்குக் கொண்டுபோய் மேய்த்துக் கொண்டும், காந்தருவ வேதத்திலே சொல்லியபடி செய்யப்பட்ட வேய்ங்குழலினாலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தைச் சத்தசுரம் பொருந்த வாசித்து ஆன்மாக்களுக்குத் தம்முடைய இசையமுதத்தைச் செவித் துவாரத்தினாலே புகட்டிகொண்டும் வருவார்.

கார்காலத்திலே ஒருநாள், இடையர்கள் பசுநிரைகளைச் சூழ்ந்துகொண்டு செல்ல, அவ்வானாயநாயனார் கையிலே கோலும் வேய்ங்குழலுங் கொண்டு நிரைகாக்கும்படி காட்டுக்குச் சென்றபொழுது; அவ்விடத்திலே மாலையைப்போல நீண்ட பூங்கொத்துக்களைத் தாங்கிக்கொண்டு புறத்திலே தாழ்கின்ற சடையினையுடைய பரமசிவனைப்போல நிற்கின்ற ஒரு கொன்றைமரத்துக்குச் சமீபத்திலேபோய் அதைப் பார்த்துக்கொண்டு நின்று, அன்பினாலே உருகி இளகிய மனசையுடையவராகி, வேய்ங்குழலினாலே இசை நூலிலே விதித்தபடி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வாசித்தார்.

அவர் பஞ்சாக்ஷரத்தை அமைத்து வாசிக்கின்ற அதிமதுரமாகிய இசை வெள்ளமானது எவ்வகைப்பட்ட உயிர்களின் செவியிலும் தேவ கருவின் பூந்தேனைத் தேவாமிர்தத்தோடு கலந்து வார்த்தாற்போலப் புகுந்தது. இடையர்கள் சூழப்பட்ட
பசுக்கூட்டங்கள் அசைவிடாமல் ஆனாயர் அடைந்து உருக்கத்தினாலே மெய்ம்மறந்து நின்றன; பால் குடித்துக் கொண்டு நின்ற கன்றுகளெல்லாம் குடித்தலை மறந்துவிட்டு, இசை கேட்டுக் கொண்டு நின்றன.

எருதுகளும் மான் முதலாகிய காட்டுமிருகங்களும் மயிர் சிலிர்த்துக்கொண்டு அவர் சமீபத்தில் வந்தன; ஆடுகின்ற மயிற்கூட்டங்கள் ஆடுதலொழிந்து அவர் பக்கத்தை அடைந்தன; மற்றைப் பலவகைப் பட்சிகளும் தங்கள் செவித்துவாரத்தினாலே புகுந்த கீதம் நிறைந்த அகத்தோடும் அவரருகிலே வந்து நின்றன; மாடு, மேய்த்துக்கொண்டு நின்ற இடையர்களெல்லாரும் தங்கள் தொழிலை மறந்து கானத்தைக் கேட்டுக்கொண்டு நின்றார்கள்.

விஞ்சையர்களும் சாரணர்களும் கின்னரர்களும் தேவர்களும் மெய்ம்மறந்து விமானங்களிலேறிக் கொண்டு வந்தார்கள்; வருத்துகின்ற உயிர்களும் வருத்தப்படுகின்ற உயிர்களும் அவ்விசையைக் கேட்டு அதன்வசமான படியால், பாம்புகள் மயங்கிப் பயமின்றி மயில்களின் மேலே விழும்; சிங்கமும் யானையும் ஒருங்கே கூடிவரும்; மான்கள் புலிகளின் பக்கத்திலே செல்லும்; மரக்கொம்புகள் தாமும் சலியாதிருந்தன. இப்படியே சரம் அசரம் என்னும் ஆன்மவர்க்கங்களெல்லாம் ஆனாயநாயனாருடைய வேய்ங்குழல் வாசனையைக் கேட்டு, இசைமயமாயின, அவ்விசையைப் பொய்யன்புக்கு அகப்படாத பரமசிவன் கேட்டு, பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய் ஆகாயமார்க்கத்தில் எழுந்தருளி வந்து நின்று,
அவ்வானாயநாயனார் மீது திருவருணோக்கஞ்செய்து,

"மெய்யன்பனே; நம்முடைய உன்னுடைய வேய்ங்குழலிசையைக் கேட்கும்பொருட்டு, நீ இப்பொழுது இவ்விடத்தில் நின்றபடியே நம்மிடத்துக்கு வருவாய்"
-என்று திருவாய்மலர்ந்தருளி, ஈசன் அவ்வானாயநாயனார் வேய்ங்குழல் வாசித்துக் கொண்டு பக்கத்திலே செல்லத் திருக்கைலாசத்தை அடைந்தருளினார்.

GemCraft Frostborn Wrath N 3 journey mode game play

GemCraft Frostborn Wrath N 3 journey mode game play

GemCraft Frostborn Wrath N 2 journey mode game play

GemCraft Frostborn Wrath N 1 journey mode game play

Friday, May 22, 2020

Apputhi Adigal

           Apputhi Adigal was born in the village of ThingalurChola kingdom. Presently in the Thanjavur district, in the Indian state of Tamil Nadu, the village is famous for its Kailasanthar Temple dedicated to Shiva, the patron god of Shaivism. Apputhi Adigal belonged to the Pallava (Kshatriya) caste. His family had the job of reciting the Vedic scriptures. He was a staunch devotee of Shiva and a follower of Appar, who he regarded as his guru even though he has ever met Appar. He named his sons, cows and everything else in his house "Tirunavukkarasu", after Appar (Thirunavukkarasar). He worshipped Appar and erected rest-houses and water-sheds and dug ponds for devotees of Shiva and named them after Appar.
Once, while Appar decided to close-by Shiva temples after worshipping in the Shiva temple at Thirupuvanam and arrived at Thingalur. Thirsty, he went to a water-shed and saw his own name "Thirunavukkarasar", written all over the place. Upon enquiry, fellow pilgrims informed him that it was the word of Apputhi Adigal
Appar went to the home of Apputhi Adigal and was welcomed by his host as a devotee of Shiva. Before Apputhi Adigal bowed to Appar, Appar prostrated before him. The guest asked Apputhi Adigal the reason why he did not name the water-shed after himself, but the name of somebody else. Apputhi was annoyed by the "causal reference" of the name of his guru. He shouted at the guest and asked if he did not know the greatness of Appar and sang his guru's glories. Finally, he asked the guest his identity. The humble guest indicated that he was the devotee who wrongly converted to another religion, but returned to Shaivism, after being cured by Shiva of colic. Apputhi realized by the description that his guest was his guru Appar.
Apputhi Adigal fell at his guru's feet and worshipped him. He washed Appar's feet with his family and sprinkled the "holy" water on him and his kin. He requested Appar to have lunch at the house; Appar consented. While Apputhi's wife cooked various delicacies, the eldest son (called "eldest Tirunavukkarasu") rushed to the garden to bring a banana leaf (traditionally lunch is served on a banana leaf in Tamil Nadu) for the guest. A snake bit him in the garden. The boy rushed with the banana leaf to the house before the poison took effect so as to not delay the feast. On handling the leaf to his parents, he collapsed. The parents realised their son had died due to the venom.
Not to delay the lunch of his guru, Apputhi and his wife hid the corpse and served Appar. Before the lunch, Appar blessed the family and wanted to present sacred ash to the family. He called the eldest son to receive it; Apputhi said he would not be available without mentioning the son's death. Finally, upon further enquiry, Apputhi revealed the truth to Appar. Appalled, Appar prayed to Shiva with the hymn Ondru Kolam thevaram. The child was resurrected. While the village cheered, the disappointed parents apologized to Appar for delaying his food. Appar had the meal with Apputhi and his children. Appar also resided at Apputhi Adigal's home for a few days, before returning to Thirupuvanam. At Thirupuvanam, Appar composed a hymn in honour of his host. Apputhi Adigal is said to have earned the grace of Shiva by serving Appar. The Periya Puranam also praises the devotion of the entire family

அமர்நீதி நாயனார்

பெயர்: அமர்நீதி நாயனார்
குலம்: வணிகர்
பூசை நாள்: ஆனி பூரம்
அவதாரத் தலம்: பழையாறை
முக்தித் தலம்: திருநல்லூர்


வரலாறு:

சோழநாட்டிலே, பழையாறை என்னும் ஊரிலே, வைசியர் குலத்திலே, பெருஞ்செல்வமுடையவரும் சிவனடியார்களைத் திருவமுது, செய்வித்து அவரவர் குறிப்பறிந்து கந்தை கீள்கோவணம் என்பவைகளைக் கொடுப்பவருமாகிய அமர்நீதிநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருநல்லூர் என்னுஞ் சிவஸ்தலத்திலே மகோற்சவதரிசனஞ் செய்ய வருஞ் சிவனடியார்கள் திருவமுது செய்யும் பொருட்டு ஒரு திருமடம் கட்டுவித்துக்கொண்டு, தம்முடைய சுற்றத்தார்களோடும் அவ்விடத்திற் போய்ச் சேர்ந்து, மகோற்சவ தரிசனஞ்செய்து, தம்முடைய மடத்திலே சிவனடியார்களைத் திருவமுது செய்வித்துகொண்டு, மன மகிழ்ச்சியோடும் இருந்தார்.

இருக்கும் நாட்களிலே, ஒருநாள், சிவபெருமான் பிராமண வருணத்துப் பிரமசாரி வடிவங்கொண்டு, இரண்டு கெளபீனங்களையும் விபூதிப்பையையும் கட்டியிருக்கின்ற ஒரு தண்டைக் கையிலே பிடித்துக்கொண்டு அந்தத் திருமடத்திற்கு எழுந்தருளி வந்தார். அதுகண்ட அமர்நீதிநாயனார் மனமகிழ்ச்சியோடும் முகமலர்ச்சியோடும் அவரை எதிர்கொண்டு வணங்கி, "சுவாமீ! தேவரீர் இங்கே எழுந்தருளிவருவதற்கு அடியேன் பூர்வத்தில் யாது தவஞ்செய்தேனோ" என்று இன்சொற் சொல்ல கூறினார்.

பிரமசாரியானவர் அவரை நோக்கி, "நீர் அடியார்களைத் திருவமுது செய்வித்து அவர்களுக்கு வஸ்திரங்களும் கந்தைகளும் கீள் கெளபீனங்களும் கொடுக்கின்றீர் என்பதைக் கேள்வியுற்று, உம்மைக் காணுதற்கு விரும்பி வந்தோம்" என்றார் ஈசன்.

அதுகேட்ட அமர்நீதிநாயனார் "இந்தத் திருமடத்திலே பிராமணர்கள் போசனம் பண்ணும்பொருட்டுப் பிராமணர்கள் பாகம் பண்ணுவதும் உண்டு. தேவரீரும் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்தார்.

பிரமசாரியானவர் அதற்கு உடன்பட்டு, நாம் காவேரியிலே ஸ்நானம் பண்ணிக்கொண்டு வருவோம். 'ஒருபோது மழைவரினும் தரித்துக்கொள்ளும் பொருட்டு நீர் இந்த உலர்ந்த கெளபீனத்தை வைத்திருந்து தாரும்" என்று சொல்லி, தண்டிலே கட்டப்பட்டிருக்கின்ற இரண்டு கெளபீனங்களில் ஒன்றை அவிழ்த்து, "இந்தக் கெளபீனத்தின் மகிமையை உமக்கு நான் சொல்லவேண்டுவதில்லை. நான் ஸ்நானம்பண்ணிக் கொண்டு வரும்வரைக்கும் நீர் இதை வைத்திருந்து தாரும்" என்று ஈசன் பெருமான் கொடுத்து விட்டு, காவேரியிலே ஸ்நானம் செய்வதர்க்கு செல்கிறார்.

அமர்நீதிநாயனார் அந்தக் கெளபீனத்தை ஒரு தகுந்த இடத்திலே சேமித்து வைத்தார்.
ஸ்நானம்பண்ணப் போன பிரமசாரியாக வேடம் கொண்ட ஈசன் அமர்நீதிநாயனார் சேமித்து வைத்த கெளபீனத்தை அது வைக்கப்பட்ட ஸ்தானத்தினின்றும் நீக்கும்படி(மறையும்) செய்து, ஸ்நானஞ்செய்து கொண்டு, மழை பொழிய நனைந்து திருமடத்தை அடைந்தார்.

அமர்நீதிநாயனார் அது கண்டு எதிர்கொண்டு, "சமையலாயிற்று", என்று சொல்லி வணங்க; பிரமசாரியார், இனி அந்நாயனாருடைய அன்பாகிய ஜலத்திலே முழுக வேண்டி, அவரை நோக்கி, "ஈரம் மாற்றவேண்டும்; தண்டிலே கட்டப்பட்டிருக்கிற கெளபீனமோ ஈரமாயிருக்கின்றது. உம்மிடத்திலே தந்த கெளபீனத்தைக் கொண்டு வாரும்" என்றார்.

அமர்நீதி நாயனார் சீக்கிரம் உள்ளே போய்ப் பார்த்து. கெளபீனத்தைக் காணாதவராகி, திகைத்து மற்றையிடங்களிலுந் தேடிக் காணாமையால் மிகுந்த துக்கங்கொண்டு, வேறொரு கெளபீனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிரமசாரியார் முன் சென்று, "சுவாமீ! தேவரீர் தந்த கெளபீனத்தை வைத்த இடத்திலும் பிறவிடங்களிலும் தேடிக் கண்டிலேன். அது போனவிதம் இன்னதென்று அறியேன். வேறொரு நல்ல கெளபீனம் கொண்டு வந்தேன். இது கிழிக்கப்பட்ட கோவணமன்று, நெய்யப்பட்ட கோவணமே. தேவரீர் நனைந்த கெளபீனத்தைக் களைந்து இந்தக் கெளபீனத்தைச் சாத்தி, அடியேன் செய்த குற்றத்தைப் பொறுத்தருளும்" என்று பிராத்தித்தார்.

அதைக் கேட்ட பிரமசாரியார் மிகக்கோபித்து, "உம்முடைய நிலைமை நன்றாயிருக்கின்றது. நெடுநாட்கழிந்ததுமன்று; இன்றைக்கே தான் உம்மிடத்தில் வைத்த கெளபீனத்தைக் கவர்ந்து கொண்டு, அதற்குப் பிரதியாக வேறொரு கெளபீனத்தை ஏற்றுக் கொள்ளுமென்று நீர் சொலவது என்னை! சிவனடியார்களுக்கு நல்ல கெளபீனம் கொடுப்பேன் என்று நீர் ஊரிலே பரவச்செய்தது என்னுடைய கெளபீனத்தைக் கவர்தற்கோ! நீர் செய்கின்ற இவ்வாணிகம் நன்றாயிருக்கின்றது" என்று சொல்ல...

அமர்நீதிநாயனார் பயந்து முகம் வாடி நடுநடுங்கி, "சுவாமீ! அடியேன் இக்குற்றத்தை அறிந்து செய்தேனல்லேன். இதைப் பொறுத்தருளும், தேவரீருக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளெல்லாம் செய்கின்றேன். இந்தக்கோவணமன்றி வெகுபொன்களையும் பட்டாடைகளையும் இரத்தினங்களையும் தருகிறேன்; ஏற்றுக்கொள்ளும்" என்றார்.

அதற்குப் பிரமசாரியார் கோபந்தணிந்தவர்
போலத்தோன்றி, "பொன்களும் பட்டாடைகளும் இரத்தினங்களும் எனக்கு ஏன்? நான் தரிப்பதற்கு உபயோகியாகிய கெளபீனத்துக்கு ஒத்த நிறையுள்ள கெளபீனம் தந்தாற் போதும்" என்று சொல்கிறார்.

அமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, "எதனுடைய நிறைக்குச் சமமாகிய கெளபீனத்தைத் தரல் வேண்டும்" என்று கேட்டார்.

பிரமசாரியார் "நீர் இழந்த கெளபீனத்தின் நிறைக்கு ஒத்த நிறையையுடைய கெளபீனம் இது" என்று சொல்லி, தமது தண்டிலே கட்டப்பட்டிருந்த கெளபீனத்தை அவிழ்த்து, "இதற்கு ஒத்த நிறையுள்ளதாகக் கெளபீனத்தை நிறுத்துத் தாரும்" என்றார்.

அமர்நீதிநாயனார் "மிகநன்று" என்று சொல்லி, ஒரு தராசைக் கொண்டுவந்து நாட்ட; பிரமசாரியார் அந்தக் கெளபீனத்தை ஒரு தட்டிலே வைத்தார். அமர்நீதிநாயனார் தம்முடைய கையிலிருந்த நெய்யப்பட்ட கெளபீனத்தை மற்றத்தட்டிலே வைத்தார்.

அது ஒத்தநிறையிலே நில்லாமல் மேலெழுந்தது. அதைக்கண்டு, அடியார்களுக்குக் கொடுக்கும்படி தாம் வைத்திருந்த கோவணங்களெல்லாவற்றையும் கொண்டுவந்து ஒவ்வொன்றாக இட இட; பின்னும் தூக்கிகொண்டு எழும்பியது. அதைப் பார்த்து, ஆச்சரியம் அடைந்து, பலவஸ்திரங்களையும் பட்டுக்களையும் கொண்டுவந்து இட இட; பின்னும் உயர்ந்தது. அது கண்டு அநேக வஸ்திரப்பொதிகளைக் கொண்டுவந்து இட்டார். இட்டும், அத்தட்டு மேலே எழும்ப; கெளபீனத்தட்டுக் கீழே தாழ்ந்தது.

அமர்நீதிநாயனார் அதைக் கண்டு மிக அஞ்சி பிரமசாரியாரை வணங்கி, "எண்ணிறந்த வஸ்திரப்பொதிகளையும் நூற்கட்டுகளையும் குவிக்கவும், தட்டு உயர்கின்றது. தமியேனுடைய மற்றத்திரவியங்களையும் இத்தட்டிலே இடுதற்கு அனுமதி தந்தருளும்" என்றார்.

அதற்குப் பிரமசாரியார் "இனி நாம் வேறென்ன சொல்லுவோம்! மற்றத்திரவியங்களையும் இட்டுப் பாரும். எப்படியும் நம்முடைய கோவணத்துக்கு ஒத்த நிறையில் நிற்கவேண்டும்'. என்றார்.

அமர்நீதிநாயனார் நவரத்தினங்களையும் பொன் வெள்ளி முதலிய உலோகங்களையும் சுமைசுமையாக எடுத்து வந்து இட இட; தட்டு எழுந்தபடியே மேலே நின்றது.

அமர்நீதிநாயனார் அதைக்கண்டு பிரமசாரியாரை வணங்கி, "என்னுடைய" திரவியங்களில் ஒன்றும் சேஷியாமல் இந்தத் தட்டிலே இட்டேன். நானும் என் மனைவியும் புத்திரனும் மாத்திரம் சேஷித்து நிற்கின்றோம். தேவரீருக்குப் பிரீதியாகில் இனி, அடியேங்களும் இத்தட்டில் ஏறுதற்கு அனுமதி தந்தருளும்" என்றார்.

பிரமசாரியாரும் அதற்கு உடன்பட்டார்.

அது கண்டு, அமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, பிரமசாரியாரை வணங்கி, தம்முடைய மனைவியாரோடும் புத்திரரோடும் தராசை வலஞ்செய்து "சிவனடியார்களுக்குச் செய்யுந் திருத்தொண்டிலே அடியேங்கள் தவறாமல் இருந்தோமாகில், அடியேங்கள் ஏறினமாத்திரத்தே இந்தத்தட்டு மற்றத்தட்டுக்கு ஒத்து நிற்கக்கடவது" என்று சொல்லி, திருநல்லூரில் வீற்றிருக்கின்ற பரமசிவனை வணங்கி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதிக்கொண்டு மகிழ்ச்சியோடு தட்டிலே ஏறினார்.

ஏறினவுடனே, பரமசிவனுடைய திருவரையிலே சாத்தப்படும் கெளபீனமும் பத்தியிலே சிறிதுங் குறைவில்லாத அமர்நீதிநாயனாருடைய அடிமைத்திறமும் பெருமையில் ஒத்திருந்தபடியால், துலாக் கோலின் இரண்டு தட்டுக்களும் ஒத்து நின்றன.

அவ்வற்புதத்தைக் கண்டவர்களெல்லாரும் அமர்நீதிநாயனாரை வணங்கி ஸ்தோத்திரஞ் செய்தார்கள். தேவர்கள் ஆகாயத்தினின்றும் கற்பகவிருக்ஷங்களின் புஷ்பங்களை மழைப்போலப் பொழிந்தார்கள். திருகைலாசபதி தாங்கொண்டு வந்த பிரமசாரி வடிவத்தை ஒழித்து, ஆகாயத்திலே பார்வதிதேவியாரோடு இடபாரூடராய்த் தோன்றி;

தம்மைத் தரிசித்து அந்தத் தராசுத் தட்டிலே தானே நின்றுகொண்டு ஸ்தோத்திரஞ் செய்கின்ற அமர்நீதிநாயனார் அவர் மனைவியார் புத்திரர் என்னு மூவர் மேலும் திருவருணோக்கஞ்செய்து, "நீங்கள் மூவிரும் நம்முடைய அருளைப் பெற்று, நம்முடைய சந்நிதானத்திலே நம்மை வணங்கிக்கொண்டிருங்கள்" என்று அருளிச்செய்து மறைந்தருளினார்.

அமர்நீதிநாயனாரும், அவர் மனைவியாரும், புத்திரரும், அக்கடவுளுடைய திருவருளினால் அந்தத்தராசுதானே தேவவிமானமாகி மேலே செல்ல, அவரோடு சிவலோகத்தை அடைந்தார்கள். அமர்நீதிநாயனாரும் 63 நாயன்மார்களில் ஒருவராக மாறினார்.

interest to reading & watching

படித்ததில் & பார்த்ததில்  பிடித்தது 

"Shared joy is a double joy; shared sorrow is half sorrow"

Amaraneedi Nayanar

               Amaraneedi Nayanar was born in Pazhayarai, the ancient capital of the Chola kingdom. He was a vaishya, member of the merchant caste. Amaraneedi was a trader of gold, jewels and clothes. Amaraneedi was a staunch devotee of Shiva, the patron god of Shaivism. He donated food and clothes to devotees of Shiva. He would especially gift Kowpeenam (loin-cloth) to Shaiva ascetics. Once, the merchant visited the Kalyanasundaresar Temple of Nallur (Tirunallur) dedicated to Shiva, to attend the temple festival. He worshipped at the Shiva temple and stayed at Nallur for a few days. One day, Shiva came to Amaraneedi's house disguised as a Brahmin Brahmachari (a celibate member of the priest caste). The young Brahmachari had matted hair and wore only a Kowpeenam. He was adored with the Tripundra (Shaiva marks on the forehead) and carried a staff with two Kowpeenams on it. The Brahmachari told Amaraneedi that he had come having heard of the merchant's generosity. Amaraneedi asked him for a chance to serve him, the Brahmachari lad consented and kept one of his dried Kowpeenams in the merchant's custody and left for a bath.


Besides the Periya Puranam, the tale is told in the temple lore of the Kalyanasundaresar Temple. Kalyanasundaresar, the presiding form of Shiva, is said to have tested Amaraneedi Nayanar in the guise of the Brahmachari boy.[5]In a weighing scale, the Brahmachari placed his wet Kowpeenam from the staff in a pan and Amaraneedi placed his Kowpeenam in the other pan. As the Brahmachari's Kowpeenam was weightier, he started putting all the Kowpeenams he had. Then he added silken and cotton garments, but the Kowpeenam pan did not rise from the ground. Finally, Amaraneedi started to add all his wealth, including gold, silver and jewels, in the other pan. After Amaraneedi realized all his wealth could not match the weight of Kowpeenam, he asked the Brahmachari if he, his wife and child can ascend the pan. On consent of the Brahmachari, he circumbulated the pan and implored Shiva that his devotion and service was true, the pans should become equal in weight. He recited the Panchakshara mantra, dedicated to Shiva and got into the pan. Immediately, the pans were balanced. Men and celestial beings showered the devotee with flowers. The Brahmachari disappeared and Shiva appeared with his consort Parvati and blessed the family. The family had become the "possessions" of Shiva. The weighing scale converted into a heavenly chariot and transported them to Kailash, Shiva's abode.
The tale of Amaraneedi (called Iruvadandari in the account) is also recalled in the thirteenth-century Telugu Basava Purana of Palkuriki Somanatha in brief and with some variation. Shiva is said to have come disguised as a devotee and given his blanket and loin-cloth for safe keeping. At the end, only Iruvadandari ascended the pan and was made a pramatha, an attendant of Shiva.

The life of Amaraneedi Nayanar is described in the Periya Puranam by Sekkizhar (twelfth century), which is a hagiography of the 63 Nayanars

interest to reading & watching

படித்ததில் & பார்த்ததில்  பிடித்தது 

"Shared joy is a double joy; shared sorrow is half sorrow"

Sword and Adventurer stage 11

Sword and Adventurer stage 10

Sword and Adventurer stage 9

Thursday, May 21, 2020

அப்பூதியடிகள் நாயனார்

அப்பூதியடிகள்

பெயர் :அப்பூதியடிகள் நாயனார்
குலம் : அந்தணர்
பூசை நாள் :தை சதயம்
அவதாரத் தலம் :திங்களூர்
முக்தித் தலம் :திங்களூர்

வரலாறு:

சோழமண்டலத்திலே, திங்களுரிலே பிராமணகுலத்திலே, பாவங்கள் என்று சொல்லப்பட்டவைகள் எல்லாவற்றையும் நீக்கினவரும், புண்ணியங்களென்று சொல்லப்படவைகள்
எல்லாவற்றையும் தாங்கினவரும், சிவபத்தி அடியார்களில் சிறந்தவருமாகிய அப்பூதியடிகணாயனார் என்பவர் ஒருவர் இருந்தார்.

அவர் சிவானுபூதிமானாகிய திருநாவுக்கரசுநாயனாருடைய மகிமையைக் கேள்வியுற்று, அவர்மேலே மிக அன்பு கூர்ந்து, தம்முடைய வீட்டினுள்ள அளவைகள் தராசுகள் பிள்ளைகள் பசுக்கள் எருமைகள் முதலிய எல்லாவற்றிற்கும் இந்நாயனாருடைய பெயரையே சொல்லிவருவார்.
இன்னும் அவர் மேலாசையினாலே, திருமடங்கள் தண்ணீர்ப்பந்தர்கள் குளங்கள் திருநந்தனவனங்கள் முதலியனவற்றை அந்நாயனார் பெயரினாற் செய்து கொண்டிருந்தார்.

இருக்குநாளிலே, அத்திருநாவுக்கரசு நாயனார் திருப்பழனமென்னும் ஸ்தலத்தை வணங்கிக்கொண்டு பிறதலங்களையும் வணங்கும்பொருட்டு, அந்தத் திங்களுருக்குச் சமீபமாகிய வழியிலே செல்லும்பொழுது, ஒரு தண்ணீர்ப்பந்தரை அடைந்து, திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயர் எங்கும் எழுதப் பட்டிருத்தலைக் கண்டு, அங்கு நின்றவர்கள் சிலரை நோக்கி, "இந்தத் தண்ணீர்ப்பந்தரை இப்பெயரிட்டுச் செய்தவர்யாவர்" என்று வினாவினார்.
அவர்கள் "இப்பந்தரைமாத்திரமன்று, இவ்விடத்தெங்கும் உள்ள அறச்சாலைகள், குளங்கள், திருநந்தனவனங்கள் எல்லாவற்றையும் அப்பூதியடிகணாயனார் என்பவர் இத்திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயரலேயே செய்தனர்" என்றார்கள்.

அதைத் திருநாவுக்கரசு நாயனார் கேட்டு, "இங்ஙனஞ் செய்தற்குக் காரணம் யாதோ" என்று நினைந்து, அவர்களை நோக்கி, "அவர் எவ்விடத்தில், இருக்கின்றவர்" என்று வினாவ; "அவர் இவ்வூரவரே இப்பொழுதுதான் வீட்டுக்குப்போகின்றார், அவ்வீடும் தூரமன்று சமீபமே" என்றார்கள்.

உடனே திருநாவுக்கரசுநாயனார் அப்பூதியடிகணாயனாருடைய வீட்டுத்தலைக்கடைவாயிலிற் செல்ல, உள்ளிருந்த அப்பூதிநாயனார் சிவனடியார் ஒருவர் வாயிலில் வந்து நிற்கின்றார் என்று கேள்வியுற்று விரைந்து சென்று, அவருடைய திருவடிகளிலே நமஸ்கரிக்க; அவரும் வணங்கினார்.

அப்பூதிநாயனார் "சுவாமீ! தேவரீர் இவ்விடத்திற்கு எதுபற்றி எழுந்தருளினீர்" என்று வினாவினார்.
திருநாவுக்கரசு நாயனார் 'நாம் திருப்பழனத்தை வணங்கிக்கொண்டு வரும்பொழுது, வழியிலே நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரைக் கண்டும் அப்படியே நீர் செய்திருக்கின்ற பிறதருமங்களைக்கேட்டும்' உம்மைக் காண விரும்பி, இங்கே வந்தோம்" என்று சொல்லி, பின்பு, "சிவனடியார்கள் பொருட்டு நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரிலே உம்முடைய பெயரை எழுதாது வேறொருபெயரை எழுதியதற்குக் காரணம் யாது" என்று வினாவினார்.

அப்பூதிநாயனார் "நீர் நல்லவார்த்தை அருளிச்செய்திலீர், பாதகர்களாகிய சமணர்களோடு கூடிப் பல்லவராஜன் செய்த விக்கினங்களைச் சிவபத்தி வலிமையினாலே ஜயித்த பெருந்தொண்டரது திருப்பெயரோ வேறொருபெயர்" என்று கோபித்து, பின்னும், பரமசிவனுக்குத் திருத்தொண்டு செய்தலாலே இம்மையினும் பிழைக்கலாம் என்பதை என்போலும் அறிவிலிகளும் தெளியும் பொருட்டு அருள்புரிந்த திருநாவுக்கரசுநாயனாருடைய திருப்பெயரை நான் எழுத, நீர் இந்தக் கொடுஞ்சொல்லை நான் கேட்கும்படி சொன்னீர். கற்றோணியைக்கொண்டு கடல்கடந்த அந்த நாயனாருடைய மகிமையை இவ்வுலகத்திலே அறியாதார் யாருளர்! நீர் சிவவேடத்தோடு நின்று இவ்வார்த்தை பேசினீர். நீர் எங்கே இருக்கிறவர்? சொல்லும்" என்றார்.

திருநாவுக்கரசுநாயனார் அவ்வப்பூதியடிகளுடைய அன்பை அறிந்து, "ஆருகதசமயப் படுகுழியினின்றும் ஏறும் பொருட்டுப் பரமசிவன் சூலைநோயை வருவித்து ஆட்கொள்ளப்பெற்ற உணர்வில்லாத சிறுமையேன் யான்" என்று அருளிச்செய்தார்.
உடனே அப்பூதிநாயனார், இரண்டு கைகளும் சிரசின்மேலே குவிய, கண்ணீர் சொரிய, உரை தடுமாற, உரோமஞ்சிலிர்ப்ப, பூமியிலே விழுந்து திருநாவுக்கரசுநாயனாருடைய ஸ்ரீபாதாரவிந்தங்களைப் பூண்டார்.

திருநாவுக்கரசுநாயனார் அப்பூதியடிகளை எதிர்வணங்கி எடுத்தருள, அப்பூதியடிகள் மிகக் களிப்படைந்து கூத்தாடினார்; பாடினார்; சந்தோஷமேலீட்டினால் செய்வது இன்னது என்று அறியாமல், வீட்டினுள்ளே சென்று, மனைவியாருக்கும் பிள்ளைகளுக்கும், பிறசுற்றத்தார்களுக்கும் திருநாவுக்கரசுநாயனார் எழுந்தருளிவந்த சந்தோஷ சமாசாரத்தைச் சொல்லி, அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, நாயனாரை வணங்கும்படி செய்தார்.அவரை உள்ளே எழுந்தருளுவித்து, பாதப்பிரக்ஷாளனஞ் செய்தார்.

அங்ஙனம் செய்த தீர்த்தத்தை அவர்களெல்லாரும் தங்கண்மேலே தெளித்து, உள்ளும் பூரித்தார்கள். நாயனாரை ஆசனத்தில் இருத்தி, விதிப்படி அருச்சனை செய்து, "சுவாமீ, தேவரீர் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்திக்க; அவரும் அதற்கு உடன்பட்டருளினார்.
அப்பூதிநாயனார் திருவமுது சமைப்பித்து, தங்கள் புத்திரராகிய மூத்ததிருநாவுக்கரசை வாழைக் குருத்து அரிந்துகொண்டு வரும்பொருட்டு அனுப்ப; அவர் விரைந்து தோட்டத்திற்சென்று, வாழைக் குருத்து அரியும்பொழுது, ஒரு பாம்பு அவருடைய கையிலே தீண்டி, அதனைச் சுற்றிக்கொண்டது.

அவர் அதை உதறிவீழ்ந்து, பதைப்புடனே அது பற்றிய வேகத்தினாலே வீழுமுன் கொய்த குருத்தை வேகத்தோடு கொண்டோடி வந்து, விஷம் முறையே ஏறித்தலைக்கொண்ட ஏழாம்வேகத்தினாலே பல்லுங் கண்ணும் சரீரமும் கருகித் தீய்ந்து உரை குழறி மயங்கி, குருத்தைத் தாயார்கையில் நீட்டி, கீழே விழுந்து இறந்தார்.

அதுகண்டு, தந்தையாரும் தாயாரும் "ஐயோ! இது தெரிந்தால் இனி நாயனார் திருவமுது செய்யாரே" என்று துக்கித்து, சவத்தை வீட்டுப் புறத்து முற்றத்தின் ஓர்பக்கத்திலே பாயினால் மறைத்து வைத்துவிட்டுனர்
அப்பமூர்த்தியிடத்திற்சென்று "சுவாமி, எழுந்து வந்து திருவமுது செய்தருளவேண்டும்" என்று பிரார்த்தித்தார்கள் அப்பமூர்த்தி எழுந்து கைகால் சுத்தி செய்துகொண்டு, வேறோராசனத்தில் இருந்து, விபூதி தரித்து, அப்பூதிநாயனாருக்கும் அவர் மனைவியாருக்கும் விபூதி கொடுத்து; புதல்வர்களுக்கும் கொடுக்கும்போது, அப்பூதிநாயனாரை நோக்கி "நாம் இவர்களுக்கு முன்னே விபூதி சாத்தும்படி உம்முடைய சேட்டபுத்திரரை வருவியும்" என்றார்.

அப்பூதிநாயனார் "இப்போது அவன் இங்கே உதவான்" என்றார். அப்பமூர்த்தி அதைக் கேட்டவுடனே சிவபிரானுடைய திருவருளினாலே தம்முடைய திருவுள்ளத்திலே ஒரு தடுமாற்றத் தோன்ற, அப்பூதிநாயனாரை நோக்கி, "அவன் என்செய்தான்? உண்மை சொல்லும்" என்றார்.

அப்பூதிநாயனார் அஞ்சி நடுங்குற்று, வணங்கி நின்று, நிகழ்ந்த சமாசாரத்தை விண்ணப்பஞ்செய்தார். அப்பமூர்த்தி அதைக்கேட்டு, "நீர் செய்தது நன்றாயிருக்கின்றது; இப்படி வேறியார் செய்தார்" என்று சொல்லிக்கொண்டு எழுந்து, சிவாலயத்துக்குமுன் சென்று சவத்தை அங்கே கொணர்வித்து, விஷத்தை நீக்கியருளும் பொருட்டுப் பரமசிவன்மேலே திருப்பதிகம்பாடினார்.

உடனே அப்புத்திரர் உயிர்பெற்று எழுந்து; அப்பமூர்த்தியுடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரிக்க; அப்பமூர்த்தி விபூதி கொடுத்தருளினார். அப்பூதிநாயனாரும் மனைவியாரும் தங்கள் புத்திரா பிழைத்தமையைக் கண்டும் அதைக்குறித்துச் சந்தோஷியாமல், நாயனார் திருவமுதுசெய்யாதிருந்தமையைக் குறித்துச் சிந்தை நொந்தார்கள்.

அப்பமூர்த்தி அதனை அறிந்து, அவர்களோடும் வீட்டிற்சென்று, அப்பூதி நாயனாரோடும் அவர் புத்திரர்களோடும் ஒருங்கிருந்து திருவமுது செய்தருளினார். அப்படியே சிலநாள் அங்கிருந்து, பின் திருப்பழனத்திற்குப் போயினார்.

அப்பூதியடிகள் சைவசமயாசாரியராகிய திருநாவுக்கரச நாயனாருடைய திருவடிகளைத் துதித்தலே தமக்குப் பெருஞ் செல்வமெனக்கொண்டு வாழ்ந்திருந்து, சிலகாலஞ் சென்றபின் பரமசிவனுடைய திருவடிகளை அடைந்தார். 63 நாயன்மார்களில் ஒருவராக ஈசன் அருளினார்.

interest to reading & watching

படித்ததில் & பார்த்ததில்  பிடித்தது