Thursday, May 28, 2020

7.இடங்கழி நாயனார்

பெயர்: இடங்கழி நாயனார்
குலம்: வேளிர்
பூசை நாள்: ஐப்பசி கார்த்திகை
அவதாரத் தலம்: கொடும்பாளூர்
முக்தித் தலம்: கொடும்பாளூர்

வரலாறு சுருக்கம்:

அனைத்து செல்வமும் சிவனுக்கே உயிர்காக்கும்.

காணப்படும் இவ்வுலகமும் இவ்வுலகத்துப் பொருள்களும் வியத்தகு விரிவும் அளப்பரும் விசித்திர விநோதங்களும் உடையனவாயிருத்தலின் அவையாவும் முற்றறிவும் முழுத்த பேராற்றலும் உள்ள ஒருவன் படைப்பாதல் பெறப்படும்.

தேவாரத்தில் "ஓருரு வாயினை மானாங்காரத் தீருருவாயொரு விண்முதல் பூதலம் படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை" - "உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனிபேதம் நிரைசேரப் படைத்தவற்றி னுயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான் கோயில்" எனவும் திருக்கோவையாரில் "ஏழுடையான் பொழில் எட்டுடையான் புயம்" எனவும் திருமந்திரத்தில் "ஒருவனுமே யுலகேழும் படைத்தான் ஒருவனுமே யுலகேழும் அளித்தான் ஒருவனுமே யுலகேழுந் துடைத்தான் ஒருவனுமே யுலகோ டுயிர்தானே" எனவும் வருவனவற்றால் விளங்கும்.

இவற்றில், "அங்கங்கே நின்றான், பொழில் (புவனம்) ஏழுடையன் உலகோடுயிர்தானே" எனவருவன இறைவன் உலகையும் உலகப் பொருள்களையும் படைத்தது மாத்திரமன்றி அவன் அவற்றைத் தன்னுடைமை யாகவே கொண்டுள்ளான் எனவும் "தானலா துலகமில்லை" எனத் துணியப்படுமளவுக்கு உலகுயிர் அனைத்திலும் வசித்துக் கொண்டிருக்கின்றான் எனவும் தெரிவித்து நிற்றல் காணலாம்.

அது, இறைவன் உலகைப் படைத்து அதனுட் புகுந்துள்ளான் (சர்வமிதம் அஸ்ருஜத ஸ்ருஷ்ட்வா தத் அநுப்ரவிஷ்ட்:) எனத் தைத்திரீய உபநிஷத்தினும், உலகமெல்லாம் ஈசனால் வசிக்கப்பெற்றுள்ளது (ஈசாவாஸ்யம் இதம் சர்வம்) என ஈசாவாஸ்ய உபநிடதத்தினும் வருவனவற்றாலும் வலுவுறும்.

ஆகவே, பொதுவிற் கருதப்படுவது போன்று உலகம் மனித ஆதீனத்துக்குட்பட்டதாதலும் உலகப் பொருள் மனித உடைமையோ உரிமையோ ஆதலும் இல்லையாகும். எனவே, இதே உலகில் இதே பொருள்களின் அநுசரணையுடன் வாழ விதிக்கப்பட்டுள்ளாராகிய மக்கள் யதார்த்தரீதியில் அவை சிவனுடைமையும் உரிமையுமானவை என்பதுணர்ந்து அதற்கமைவாம் கௌரவ கண்ணியத்துடனும் பயபக்தியுடனும் அவற்றில் தமக்கு வேண்டுவனவற்றை இறைவனுக்கே முதலில் அர்ப்பணித்துப் பிறகே தாம் ஏற்கவேண்டும் என்ற ஒழுங்கு நியதி சைவத்தில் இடம் பெறலாயிற்று.அப்படி சர்வமும் சிவனுக்கு சிவபக்தர்களுக்கு என்று அளித்து அறுபதுமூவரில் ஒருவராக ஈசன் அருள்புரிந்த ஒரு சிற்றரசரை பற்றி பார்க்க போகிறோம்...

"மடல் சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் அடியேன்"
திருத்தொண்டத் தொகை.

தில்லையம்பலத்துக்குப் பொன்வேய்ந்த ஆதித்தனுக்கு முன்னோராகச் சோழர் குடியில் தோன்றினார் இடங்கழி நாயனார்; கோனாட்டின் தலைநகராகிய
கொடும்பாளூரில் தங்கியிருந்து வேளிர் குலத்து அரசினை ஏற்று ஆட்சிபுரிந்தார்.

சைவநெறி வைதிகத்தின் தருமநெறியோடு தழைப்பத் திருகோயில்கள் எங்கும் வழிபாட்டு அர்சனைகள் விதிப்படி திகழச் செய்தார். சிவனடியார்கள் வேண்டுவனவற்றை விரும்பிக் கொடுக்கும் சீலமுடையவராய் ஒழுகினார்.

இவர் அரசு புரியும் நாளில் சிவனடியார்க்குத் திருவமுதளிக்கும் தவமுடைய அடியார் ஒருவர், உணவமைத்தற்குரியன எதுவும் கிடைக்காமல் மனம் தளர்ந்தார். அடியாரை அமுது செய்வித்தலிலுள்ள பேரார்வத்தால் செய்வதறியாது அரசர்க்குரிய நெற்பண்டாரத்திலே நள்ளிரவிற் புகுந்து
நெல்லைக் களவு செய்தார்.

அந்நிலையில் காவலர்கள் அவரைப் பிடித்து இடங்கழியராகிய மன்னர் முன் நிறுத்தினர்.

இடங்கழியார் அவரைப் பார்த்து, "நீர் ஏன் நம்முடைய நெற்பண்டாரத்தைக் கவர்ந்தீர்" எனக் கேட்டார்.

அதுகேட்ட அடியவர், "நான் சிவனடியார்களைத் திருவமுது செய்விக்கும் பொருளின்மையால் இவ்வாறு செய்தேன்" என்றார்,

இடங்கழிநாயனார் மிக இரங்கி, "எனக்கு இவரன்றோ பண்டாரம்" என்று சொல்லி, "சிவனடியார்களெல்லாரும் நெற்பண்டாரத்தை மாத்திரமின்றி மற்றை நிதிப் பண்டாரங்களையும் எடுத்துக் கொள்க" என்று எங்கும் பறை யறைவித்தார். பின்னும் நெடுங்காலம் திருநீற்றின் நெறி தழைக்கும்படி தண்ணளியோடு அரசியற்றிக்கொண்டிருந்து சிவபதத்தை அடைந்தார்.

அருள் வேந்தராகிய இவர் தண்ணளியால் நெடுங்காலம்
திருநீற்றின் ஒளி தழைப்ப அரசு புரிந்திருந்து சிவபதம் அடைந்தார்.

No comments:

Post a Comment